இலங்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை – அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகின்றன. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகின்றன. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

இவை பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகள் ஆகும். இன்றும் கூட, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பேசி வருகிறது. ஆனால் மருந்துப் பற்றாக்குறை தொடர்பிலோ அல்லது சுகாதாரத் துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கோ எந்தப் பதிலும் இல்லை. ​​நாட்டு மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. இலவச சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக இல்லை.

LP 8.1 எனப்படும் கோவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹாங்காங்கில் பரவி வருகின்றன. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இந்த அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அவ்வாறே சின்னம்மை பரவுவதாலும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு குறைந்த பட்சம் 6 வாரங்கள் தொடராக சிகிச்சையளிக்க வேண்டும். இந்த நோய் பரவுவதற்கான சாத்தியாம் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, இதற்கும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *