யாழில் 4 சபைகளில் மாத்திரம் ஆட்சியை கைப்பற்ற முயல்வோம்

தமிழ் தேசிய பேரவையாக போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் ஆட்சியை கைப்பற்ற தவிசாளர்களை களமிறக்கி போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை ஆகிய
மூன்று சபைகளில் தமிழ்த் தேசியப் பேரவை தனிப் பெரும்பான்மையுடன் வந்திருக்கிறது. அதேபோன்று ஊர்காவற்றுறை பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் மட்டத்தில் தமிழ் தேசிய பேரவைக்கு கூடுதலான ஆசனம் இருக்கின்றது. அந்த வகையிலே இந்த நான்கு சபைகளிலும் தமிழ் தேசிய பேரவையாகிய நாங்கள் தவிசாளர் பதவிக்காக எங்கள் உறுப்பினர்களை களத்தில் இறக்குவோம்.
ஏனைய சபைகள் தொடர்பாக ஏனைய கட்சிகளோடு இதுவரைக்கும் எந்த விதமான புரிந்துணர்வும் ஏற்படாவிடின், நாங்கள் அந்த சபைகளிலே கூடுதலான ஆசனங்களை பெற்ற தமிழ் தேசியக் கட்சிக்கு எங்களுடைய ஆதரவு தேவைப்படுகின்ற போதுஅதனை வழங்குவதாகவும் தேவையில்லாத நேரத்தில் நாங்கள் நிச்சயமாக போட்டிபோடுவதில்லை என்ற முடிவையும் எடுத்திருக்கிறோம்.
மேற்படி நான்கு சபைகளையும் தவிர வேறு எந்த சபையிலும் புரிந்துணர்வில்லாத பட்சத்தில் நாங்கள் எங்கள் வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை.
தமிழ் தேசிய பேரவை கூடுதலான ஆசனங்களை பெற்ற சபைகளில் மட்டுமே வேட்பாளர்களை முன் நிறுத்தப் போகிறோம். யாரை தவிசாளாராக முன்னிறுத்துவது என்பது தொடர்பாக விரைவில் தீர்மானிப்போம்.
இந்தத் தேர்தல் முறைகளால் நாம் எதிர்பாராத ஒரு சில பின்னடைவுகள் எமக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறையில் பட்டியலில் பெயரிடப்பட்டு சிவாஜிலிங்கம் முதன்மை வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் வல்வெட்டித்துறையில் எமக்கு பட்டியலில் ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அதை தீர்த்துக் கொண்டு செல்லும் திட்டமொன்றை உருவாக்கி செயற்படுவோம் – என்றார்.
![]()