இந்தியா

விஜய்க்கு சால்வை போர்த்த முயற்சி: ரசிகரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பாதுகாப்பு படை வீரர்?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கொடைக்கானலில் 5 நாட்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு நேற்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

முன்னதாக விஜய் மதுரை விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்றபோது திடீரென்று ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி விஜய் அருகே செல்ல முயன்றார். இதை பார்த்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கியை எடுத்து அந்த ரசிகரின் தலையில் வைத்து விசாரித்தனர்.

அதில், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் இன்பராஜ் என்பதும், அவர் விஜய்யிடம் சால்வையை கொடுக்க பாதுகாப்பை தாண்டி உள்ளே வந்ததும் தெரியவந்தது. பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், இன்பராஜை சால்வை அணிவிக்க விடாமல் தடுத்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதே நேரம், அந்த வீரர் துப்பாகியை எடுத்து மிரட்டவில்லை எனவும் தற்செயலாக துப்பாக்கியை எடுத்ததை மிரட்டுவது போல சித்தரிக்கப்படுவதாகவும் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *