இலங்கை

தமிழ் மக்களை இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்; ஜனாதிபதி அநுர திட்டவட்டம்..!

தமிழ் மக்களின் மொழி, காணி உரிமை மற்றும் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காலிமுகத்திடலில்  இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டின் எதிர்காலமும், மக்களின் நலனும் முழுமையாக தேசிய மக்கள் சக்தியை பொருத்தே அமையும்.

NPP-க்கு வெளியே எந்த சவாலும் இல்லை. நமக்குள்ளேயே சவால்கள் உள்ளன. அந்த பிளவுகளையும் எதிர்மாறான நிலைகளையும் நாம் நேருக்கு நேர் எதிர்கொண்டு, புதிய சூழ்நிலைகளுக்கேற்ப மாற வேண்டியுள்ளது.

நாட்டை மீட்டெடுக்கும் வழியில் எங்கள் அரசு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்திருக்கிறது. ஆனால், அதன் பலனை சில மாதங்களில் பார்க்க முடியாது. எந்தவிதமான விரைவு வழியும் கிடையாது.

அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான நாட்டை கட்டியெழுப்பும் கட்டத்தில் நாங்கள் தற்போது நான்கு முக்கிய தூண்களை பதித்து இருக்கிறோம். அவை, ஊழலற்ற அரசியல் பண்பாடு, இன ஒற்றுமை, சட்ட ஒழுங்கு, பொருளாதார நிலைத்தன்மை என விவரித்தார்.

தொழிற்சங்கங்கள் தொடர்பில் உரையாற்றிய ஜனாதிபதி,

“உங்கள் பழைய மனப்பாங்குகளை மாற்றுங்கள். சிறிய விடயங்களுக்காக வீதியில் போராட வேண்டியதில்லை. எங்களை வீதிக்கு அழைத்து வர தேவையில்லை. நாங்கள் உங்கள் இதயத் துடிப்பையும், ஆசைகளையும் உணரும் அரசியல் சக்தி,” என்றார்.

நாங்கள் அரசியல்வாதிகளுக்காக அரசியலமைப்பு, அரசாணைகள், சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்ட பல சலுகைகள், உரிமைகளை கூட விட்டுவிட்டோம். எங்களுக்கு சற்று நேரம் தாருங்கள்.

தொழிற்சங்கங்களே, உங்கள் பழைய சிந்தனைகளை கழற்றி, புதிய நோக்கத்துடன் நாட்டை கட்டி எழுப்ப நம்முடன் சேருங்கள்.

அரச ஊழியர்களுக்காக எவ்வித கோரிக்கையும் இல்லாமல் அடிப்படை ஊதியம், மேலதிக நேர கொடுப்பனவு, வருடாந்த உயர்வுகள் கூடுதல் சலுகைகள் ஆகிய அனைத்தையும் நாம் அதிகரித்து வழங்கியிருக்கிறோம்.

தமிழ் மக்களின் உரிமைகள் நிச்சயம் உறுதிப்படுத்தப்படும்.

தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். தேசிய ஒருமைப்பாடு இன்றி நாட்டில் முன்னோக்கி பயணிக்க முடியாது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான விருப்பை வடக்கு கிழக்கு மக்களும் எமக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன் காரணமாகவே அவர்களின் கட்சிகளை புறக்கணித்து எமக்கு வாக்களித்துள்ளனர்.

ஆகவே, நாம் அந்த மக்களை கைவிடப்போவதில்லை.

தமிழ் மக்களின் மொழி , காணி உரிமை , வாழும் உரிமை மற்றும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்.

எம்முடைய நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் இந்த விடயங்கள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.

பிளவுபடுத்தும் அரசியலை முடிவுறுத்தி ஒன்றிணைந்த அரசியலை உருவாக்கியுள்ளோம். அந்த அத்திவாரத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதுவே நாம் பெற்றுள்ள வெற்றியாகும்.

அத்துடன்,பலமான அரச சேவை அவசியமாகும். நாம் பலமான அரச சேவையை உருவாக்குவோம். அரச சேவைக்கு ஆட்சேர்ப்பையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.

நாட்டின் அரசியலில் பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமாகியுள்ளது. அத்தகைய நாட்டை நாம் உருவாக்கியுள்ளோம்.நிறைவேற்றுத்துறை தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளது.

ஆகவே, உள்ளுராட்சி மன்றங்கள் பிரதேச சபைகளும் தேசிய மக்கள் சக்தி வசமாக வேண்டும்.

அதன் ஊடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். உள்ளுராட்சி மன்றங்கள் ஊழல் மிகுந்ததாக இருந்தால் அபிவிருத்திகள் தடைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *