இலங்கை

2028 இல் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டியேற்படும்

2028இல் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளது. இதனை மீள செலுத்தும் சவாலை இந்த அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளவிருக்கிறது என்பது புரியவில்லை. இந்த சுமையும் மக்கள் மீதே சுமத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தம்மிடம் ஆட்சியை ஒப்படைத்தால் 6 மாத காலம் போதும் என தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், நாட்டில் எவ்வித மாற்றமும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களைக் கூறிக் கொண்டிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம் என லால் காந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

6000 பில்லியன் ரூபாவை இந்த அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது. இது வெளிநாட்டுக் கடன் இல்லை என்ற போதிலும், இதனையும் அரசாங்கம் மீள செலுத்த வேண்டும்.

சுற்றுலாத்துறை தவிர்ந்த வேறு எந்த வருமானமும் இன்றி அரசாங்கம் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.

சமீபத்தில் பட்டலந்த குறித்து பேசப்பட்ட போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இவர்கள் சிறந்த நட்புறவையே பேணி வருகின்றனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாட்டின் எதிர்காலம் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *