தபால் மூல வாக்களிப்பு திகதிகளில் சிறு மாற்றம்

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் உற்சவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் கண்டி உயர்நிலை பெண்கள் பாடசாலையில் விசேட வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 7 ஆம் திகதி 113 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 187,345 தபால் மூல வாக்குச் சீட்டுகளும் 10 ஆம் திகதி 105 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 211,904 தபால் மூல வாக்குகளும் 15 ஆம் திகதி 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 16,688 தபால் மூல வாக்குச் சீட்டுகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீதமுள்ள 112 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 232,558 வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக 22, 23, 24, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
![]()