இலங்கை

’பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கோவணத்தை இழந்த நிலை’

“பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலை” தான் இன்று ஈழத் தமிழர்களின் நிலை. நீலமும் பச்சையும் மாறி மாறி ஏமாற்றிய காலம் போய், இன்று சிவப்பும் ஏமாற்ற புறப்பட்டிருக்கிறது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது என்று பாராளுமன்ற குழுத் தலைவரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

காரைதீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எமக்கு பாதுகாப்பு இல்லை; வாகனம் இல்லை; ஏன்? ஆறுதல் பரிசாக இருக்கக்கூடிய 10 மில்லியன் ரூபாய் வரவு-செலவுத் திட்ட நிதி கூட இல்லை. இதுதான் எமது சமகால நிலைவரம் என்றார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆறு மாத காலத்தில் தாங்கள் யார் என்பதனை இன்றைய அரசாங்கம் தெட்டத்தெளிவாக காட்டி இருக்கின்றது. இனியும் அவர்களை நம்ப முடியுமா? கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் நீலம், பச்சை கட்சிகளில் வெறுப்படைந்த தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் சிவப்பு கட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த சிவப்பு கட்சி இன்று தமிழர்களை 100% ஏமாற்றி வருவதனை நீங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக, அவர்கள் கொண்டு வந்த கிளின் ஸ்ரீலங்கா இலங்கை சுத்தப்படுத்தும் திட்டத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதில் ஒருவர் ஆவது தமிழர் இல்லை. பல்லின நாடு என்கின்றார்கள். நாங்கள் இனவாத மதவாதமற்ற பேதமற்ற அரசாங்கம் என்கிறார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஆறு அரச தமிழ் எம்.பிக்களை வைத்துக்கொண்டு இப்படியான இனவாதத்தை செய்கிறார்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *