இலங்கை

குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நாடாக இலங்கை இருக்கக்கூடாது; சிறிநேசன் எம்.பி வலியுறுத்து..!

குற்றவாளிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கின்ற, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நாடாக இந்த நாடு இருக்கக் கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 127வது ஜனனதினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளை தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,  தமிழ்த் தந்தை செல்வநாயகம் அவர்களின் 127 வது பிறந்த தினத்தை நாங்கள் அமைதியான முறையில் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் தந்தை செல்வா தமிழர்களைன் இடர்களை அறிந்து சாத்வீக முறையில் அகிம்சைப் பாதையில் தமிழர்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என தமது வாழ்நாளில் அதிக காலத்தை அர்ப்பணித்தார்.

ஈழத்து காந்தி என்று சொல்லக் கூடிய விதத்தில் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் மூலமாக உண்மை, நேர்மை, நீதியான பார்வை மற்றும் சத்தியம் என்பவற்றின் அடிப்படையில் அவர் தமிழர்களால் துதிக்கப்படுகின்ற மகானாகக் காணப்படுகின்றார்.

தமிழர்களின் எதிர்காலத்தைச் சிந்தித்து. தமிழ் மக்கள் ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் காந்திய வழியில் பயணித்த உத்தமராகவே நாங்கள் அவரைப் பார்க்கின்றோம். அப்படிப்பட்ட அந்த உத்தமரின் கனவு இந்த இனவாத அரசுகளினால் தோற்கடிக்கப்பட்டது.

அன்று அவர் அகிம்சை ரீதியாகப் போராடி பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவற்றினை நிறைவேற்றியிருந்தார்.

ஆனால் பேரினவாத அரசுகள் அவருக்குத் தக்க பதிலைக் கொடுக்கவில்லை. அவரது உன்னதமான போராட்டத்தை மழுங்கடித்தார்கள்.

தந்தை செல்வாவின் உன்னதமான அகிம்சைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமையினாலேயே எமது இளைஞர்கள் சிங்கள் அரசுக்கு அகிம்சை ரீதியாகப் புரிய வைக்க முடியாது என்று ஆயுத ரீதியில் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள்.

கடந்த 77 வருடங்களாக நாங்கள் பல கட்சிகளின் ஆடைகளைப் பார்த்து வருகின்றோம். இன்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலாவது ஏதேனும் ஒளிக்கீற்று தென்படுமா என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவர்கள் இந்த நாட்டில் அபிவிருத்திதான் முக்கிய பிரச்சனை என்று சொல்லி தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வித முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரியவில்லை.

இந்த மாகாணசபை முறைமையை தாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்ற கருத்தோடு நின்றுவிட்டார்கள். சமஸ்டி முறையான ஒரு கூட்டாட்சியை வழங்குவதற்கு ஒருபோதும் அவர்கள் சித்தமாக இல்லை.

ஒற்றையாட்சி எனப்படும் சிங்கள பௌத்த அடக்குமுறையின் கீழ் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக சமத்துவம் இழந்து வாழ வேண்டும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியினரின் சிந்தனையாகவும் இருக்கின்றது.

ஏனெனில் அவர்கள் கொண்டுவந்த கிளீன் சிறிலங்கா திட்டம், தொல்லியல் ஆணைக்குழு போன்றவற்றில் ஒரு தமிழரைக் கூட அவர்கள் நியமிக்கவில்லை. இந்த விடயங்களைப் பார்க்கும் போது ஒருவகையான அமைதியான இனவாத சிந்தனை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என நாங்கள் சிந்திக்கின்றோம்.

அகிம்சை, ஆயுத ரீதியில் போராடிய நாங்கள் தற்போது இராஜதந்திர ரீதியில் நமது பிரச்சனைக்கு ஒரு தீர்வினை பேச்சுவார்த்தைகளை மூலம் காணலாம் என எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்குரிய ஆரோக்கியமான பதில்கள் இந்த இடதுசாரிக் கட்சி என்று சொல்லப்படுகின்ற சோசலிசக் கட்சி ஆட்சிக் காலத்திலும் எமக்குத் தெரியவில்லை. தற்போது ஆறு மாதங்கள் கடந்துள்ளன. இன்னும் சில காலத்தில் அவர்களின் குணாதிசயங்க எவ்வாறு இருக்கும் என அறிய முடியும்.

நாங்கள் பல இழப்புகள், இன அழிப்புகளைச் சந்தித்த சமூகம். எமது தந்தை இயற்கையாக மரணம் எய்திருந்தார். ஆனால் இயற்கையை வென்ற எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஆயுதக் கலாசாரம் நத்தார் ஆராதனையின் போது கொல்லப்பட்டார். அதற்கான நீதியும் கிடைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இங்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் ஜனாதிபதியும் ஒரு கருத்தினை முன்வைத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 21ற்குள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சம்மந்தமாக திருத்தம் ஏற்படும். குற்றத்தில் இருந்து தப்பித்தவர்களுக்குக் கூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆயுதக் கலாச்சாரத்தினூடாக கிழக்கில் எமது பல அரசியற் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மதத்தலைவர்கள், தொண்டர் நிலைய ஊழியர்கள், குழந்தைகள் எனப் பாரபட்சமின்றி பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் தலைமைகளை ஒழிக்க வேண்டும் என்றே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, இந்த ஆட்சியாளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற விடயம் பட்டலந்த சித்திரவதை முகாம் போன்று எமது இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக உயர்திரு அமரர் இராயப்பு யோசப் அவர்கள் கூறிய விடயத்திற்கும் ஒரு நியாயத்தினை வழங்க வேண்டும். வரும் ஏப்ரல் 21 ற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிகார நீதியை வழங்குவதாக வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

எனவே நல்லது நடக்க வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கக் கூடாது. அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது.

கடந்த காலத்தில் பயங்காரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் நடமாடித் திரிகின்றார்கள். எனவே குற்றவாளிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கின்ற, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற நாடாக இந்த நாடு இருக்கக் கூடாது.

இந்த இடத்தில் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினத்தை என்பதை விட அவருடைய ஜனன தினத்தினை நாங்கள் பதித்து அவருடைய இந்த இடத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வட்டார உறுப்பினர்களும் வெற்றி பெற்று நமது மாநகர சபை ஆட்சிப்படத்தில் ஏற வேண்டும் அதன் மூலமாக தந்தை செல்வா வகுத்த சத்திய நரியின் படி எங்களுடைய ஆட்சி அமைய வேண்டும்.

மக்களுக்கு இந்த இடத்தில் ஒரு உருக்கமான செய்தியை கூறுகின்றோம் நாங்கள் அறநெறி பாதையில் பயணிக்கின்ற தமிழரசு கட்சியினர் இந்த தேர்தலிலும் குதித்து இருக்கின்றோம் அதாவது நடைபெறுகின்ற இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் எமது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

மட்டக்களப்பை பொறுத்தவரையில் மட்டக்களப்பில் எமக்கு 9 சபைகள் காணப்படுகின்றன இந்த ஒன்பது சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைக்கக்கூடிய விதத்தில் எங்களுடைய தமிழ் வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக சொல்லப் போனால் ஊழல், மோசடி, லஞ்சம், திருட்டு, வீண்விரையம், கடத்தல், கப்பம் மற்றும் காணாமல் ஆக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தவிர்த்துக் கொள்வதோடு, அதேபோன்று தென்னிலங்கை சக்திகள் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வெல்வதற்கு வேண்டிய அவசியம் கிடையாது உள்ளூர் சக்திகளாக உள்ளூர்வர்களாக உங்களுடைய உறவுகளாக போட்டியிடுகின்ற மட்டக்களப்பில் போட்டி போடுகின்ற, திருகோணமலையில் போட்டி போடுகின்ற, அம்பாறையில் போட்டி போடுகின்ற, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற சகல மாவட்டங்களில் போட்டி போடுகின்ற எமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு தந்தை செல்வநாயகம் அவர்களுடைய ஆசீர்வாதத்தையும் இறை ஆசியையும் வேண்டிக் கொள்வதோடு சகலரது வெற்றிக்கும் உங்களுடைய கடுமையான ஒத்துழைப்பையும் வாக்களிப்பையும் செய்ய வேண்டும் என இந்த இடத்தில் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *