பெண் வைத்தியர் மீது துஷ்பிரயோகம்; இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவரே பிரதான சந்தேக நபர்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற நபர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநுராதபுரம் வைத்தியசாலையில் சேவையில் இருந்த பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு உறுதியளித்த
அவர் மேலும் பேசுகையில்,
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் எடுத்துரைத்தார்.இச்சம்பவம் கவலைக்குரியது.குற்றவாளியை கைது செய்வதற்கு ஐந்து விசேட பொலிஸ் பிரிவுகள் ஊடாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சந்தேக நபர் அ இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்.
இதேவேளை பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற நம்பத் தகுந்த தகவல்களுக்கு அமைவாகவே மாத்தறை பகுதியில் வீடொன்று சோதனை செய்யப்பட்டது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு சென்று தமது அடையாள அட்டையை காண்பித்து, தாம் வருகை தந்தமைக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர். வீட்டை சோதனயிடுவதற்கு வீட்டில் இருந்தவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பத் தகுந்த தகவல்களுக்கு அமைவாகவே நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு கிடைக்கும் தகவல்களை அலட்சியப்படுத்த முடியாது என்றார்.
![]()