இலங்கை

இருப்பது போதாதா? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள்?

அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருகிறது. வற் (VAT) வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்தி, மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி வருகிறது. சேவை ஏற்றுமதி துறைக்கு 15% புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்றுமதி ஊக்குவிப்பாகும். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு பதிலாக வரி விதிப்பது நியாயமற்றது. நாட்டின் பொருளாதார நிலை, நாட்டின் டொலர் பற்றாக்குறை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் போதிய விளக்கம் இல்லாததால் இவ்வாறு நியாயமற்ற வரி விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இத்தகைய வரி விதிப்பின் ஊடாக, பண மோசடி நடப்பதோடு நாட்டிற்கு பாதகமே விளையும். உண்டியல் ஹவாலா போன்ற முறைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது ​​நாட்டுக்குச் சேர வேண்டிய வருமானம், அந்நியச் செலாவணி இழக்கப்படுகிறது.

கைத்தொழில் அமைச்சராக இருக்கும் அமைச்சர் ஹதுன்நெத்தி இந்த வரிக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்த வரிக்கு தான் எதிர்ப்பு என்றால் எவ்வாறு அமைச்சரவையில் இருக்குறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்புகிறேன். நாட்டு மக்களை ஏமாற்றமடையச் செய்து, இளைஞர்களின் அபிலாஷைகளை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அநுராதபுரம் நகரில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சிறந்த தொலைநோக்குப் பார்வையும், திட்டத்தையும் கொண்ட ஒரு அரசியல் தரப்பில் நாம் சேர வேண்டும். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திறமையான வேட்பாளர்களுக்கு நாம் இடமளிப்போம். நல்லவர்களை அரவணைத்துக் கொள்வோம்.

நீதிமன்றங்களுக்குள்ளும் கொலைகள் நடக்கின்றன. இது தொடர்பாக நாட்டில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்து சபையில் பேசும் போது சபாநாயகர் தடங்கள் ஏற்படுத்துகிறார். தேசிய பாதுகாப்பை பாதிக்கும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு தீர்வு காண அரசாங்கத்தால் முடியாமல் இருப்பதால் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்துகிறது என்பது தெளிவாகிறது. பேசுபவர் எவ்வாறு பேசினாலும் கேட்பவர் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும். தெளிவான அதிகாரம் இந்த அரசுக்கு காணப்படுகிறது. அர்ஜூன் மகேந்திரனின் பிரச்சினையும் இவ்வாறானதே. அரசாங்கம் இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை மக்களுக்கு இது தொடர்பில் நாம் தெளிவூட்டிக்கொண்டே இருப்போம்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *