“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தொலைவில்” சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற ‘எந்த பொறுப்பும்’ எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இல்லையென, வலிந்து காணாமல்போன கணவருக்காக தனது தளராத போராட்டத்தை கௌரவிக்கும் வகையில் சர்வதேச விருது பெற்ற மனித உரிமை ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

“எங்களுக்கு நீதி இன்னும் வெகு தூரத்தில், நீதி வருமென தெரிகிறது. நீதி வழங்கப்படுவதாகக் கேட்கிறோம். ஆனால் அந்த நீதி இன்னும் வெகு தொலைவில் உள்ளது. நான் மாத்திரமல்ல, இந்த நாட்டில் இறுதிக் கிரியைகளை இழந்தவர்கள் ஏராளம். வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என அனைத்து இடங்களிலும், தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பெண்கள் இன்னும் தரையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஆனால், இன்னும் இந்நாட்டில் மாறிவரும் ஆட்சியாளர்கள் எவரும் நீதியைப் பற்றிய கரிசனை இல்லை. எனவே நாம் இயற்கைக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் எங்களுக்கு உதவக்கூடியவர்களை நாடி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.”

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நவகமுவ பத்தினி ஆலயத்தில் கண்ணகி பூசையை நடத்திய, ஒன்றரை தசாப்த காலமாக நீதிக்காக போராடி வரும் சந்தியா எக்னெலிகொட ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 16ஆவது வருடத்திற்கு முன்னர் அவரை வலிந்து காணாமல் ஆக்கிய குற்றவாளிகளை தண்டிக்குமாறு நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“2026 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதிக்கு முன்னர் குற்றவாளிகளை தண்டிக்க இந்த நாட்டின் ஆட்சியாளர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டில் நீதிக்காக வீதியில் செல்லும் மக்களுக்கு நீதி வழங்குங்கள். அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நமது மக்களுக்கு நீதி கிடைக்கும்போது, ​​இந்த நாட்டின் சுதந்திர குடிமக்களாக நாம் சுவாசிக்க முடியும்.”

ஒன்றரை தசாப்தங்களாக நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் சந்தியா எக்னெலிகொட இதன்போது நன்றி தெரிவித்தார்.

“இந்த மறுமலர்ச்சி அரசாங்கம் எமக்கு நீதி வழங்கும் என்றும் உண்மையான மறுமலர்ச்சியைக் காட்டி நாட்டை மாற்றும் என்றும் நாங்கள் நினைக்கிறோம். இன்று முதல் இந்த நாட்டின் நீதிமன்றங்களில் என்ன செய்ய வேண்டியிருக்கிறது? நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த 15 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.”

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டில், இலங்கையில் போர் மற்றும் முந்தைய கிளர்ச்சிகளில் இருந்து காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் உலகின் துணிச்சலுக்கான விருது வழங்கப்பட்டது.

காணாமல் போன கணவர் பிரகித் எக்னெலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர அதிகாரிகள் ஏற்படுத்திய தடைகளையும் மீறி 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே விருதுக்கு தெரிவானதற்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனன் தெரிவித்திருந்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *