கட்டுரைகள்

பவளத்திட்டில் பழந்தமிழர் கறி!… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

சமீபத்தில் நான் குயின்ஸ் லாண்ட் மாநிலத்திலுள்ள கேன்ஸ் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள பவளப்பாறையை பார்வையிடச் சென்றேன். இந்த பின்னணியில் எழுதப்படுவதே இக்கட்டுரை.

பழந்தமிழர் வரலாற்றை கூறி உலக அளவில் தமிழரைப் பெருமைப் படுத்த
இயற்கைக்கும் மனமில்லையெனத் தோன்றுகிறது. ஆம், கடற்கோளைப் பற்றித்தான் கூறுகிறேன். சிலரை பார்த்திருப்போம் தம்மைப்பற்றி எப்போதும் பெருமையாக பேசிக்கொண்டு
இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களின் பெருமைகளை கண்டு கொள்ளமாட்டார்கள். வேண்டுமெனி்ல்
இதை நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். யாராவது தங்களைப் பற்றி எப்போதும் வீண்தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவர்கள் யாரையும் பாராட்டவோ அவர்களது பெருமைகளை கூறுபவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.

ஆழிப்பேரலையால் அழிவுக்குட்பட்டு கடலுக்குள் மூழ்கிய குமரிக் கண்டமும் பூம்புகாரும் தமிழர் வரலாற்றையும் தொன்மையையும் பறைசாற்றும் வாய்ப்பை இழக்கச் செய்தது. இப்படி இழந்த பெருமையை அதற்குண்டான
ஆதாரங்களைத் திரட்டி வெளியுலகுக்கு தெரியப்படுத்துவது தமிழரின் தற்பெருமை ஆகாது.

ஒன்றும் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதவர்களே வீண் பெருமை பேசும்போது எல்லா பெருமைகளையும் கடல்கோளால் இழந்துவிட்ட ஒரு காரணத்தால் ஏன் நம் பெருமைகளச் சொல்லாதிருக்க வேண்டும். தக்க சான்றுகளுடன் நிறுவினால் ஏற்றுத்தானே ஆகவேண்டும்.

தமிழர் நாகரிகத்தையும் தமிழரின் வரலாற்று தொன்மையையும் ஏற்க மறுப்பவர்கள் கூறும் காரணம் இதற்கெல்லாம் என்ன சான்றுள்ளது என்பதுதான். சங்க இலக்கியங்களில் கூறுவதை சொன்னால் அவற்றை எல்லாம் சான்றாக எடுத்துககொள்ள முடியுமா என்கிறார்கள். இதனை தமிழர் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்களும் சொல்வதே வியப்பாயுள்ளது.

நாம் மட்டும் புராணங்களில் கூறப்படுவதை சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். ஆனால் இலக்கியங்களில் உள்ளவற்றை எல்லாம் சான்றாக எடுத்துக் கொள்ளமுடியாதாம். பல யுகங்களை கணக்காக கொண்டு சொல்லப்படும் புராணங்கள் நம்பப் படும்போது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இலக்கியங்களை ஏன் நம்பக்கூடாது.

இதற்கெல்லாம் காரணம் யார், எது?

யாரென்றால் அது தமிழனே. எதுவென்றால் மதமே. தமிழர் மதத்தாலும் தமிழாலும் பிரிந்து கிடக்கின்றனர். மதத்தை பெரிதாக நினைப்பவர்கள் என்னதான் தமிழ் தமிழென்று தமிழைத் தூக்கிப் பிடித்தாலும்
மதமா தமிழா என்ற நிலைவந்தால் தமிழை தடாலென்று கீழோ தள்ளி விடுவார்கள்.

அதே சமயம் தமிழ்மொழியை உயிராக நினைப்பவர்கள் தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு மதத்தைவிட மொழிதான் பெரிது. இவர்களுக்கு பெரிய சவால் இருக்கவே செய்கிறது. மதத்தில் காட்டும் ஆர்வத்தை தமிழிலும் காட்ட தமிழரை தட்டியெழுப்ப வேண்டும்.

அடுத்ததாக கிடைக்கும் சான்றுகளை மறுப்பவர்கள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் கிடைக்கும் சான்றுகளை எல்லாம் வேறு பெயரில் மாற்றுபவர்கள் என்று
தமிழர் வரலாற்றை மூடி மறைக்கத் துடிப்பவர்கள் இன்னொரு புறம். சான்றுகள் பல சொல்லலாம். தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்பார்கள். கீழடி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்பார்கள்.

கடலுக்கடியில் புதையுண்டுள்ள காவிரிப் பூம்பட்டணம் அல்லது பூம்புகார் தமிழர் நாகரிகத்தை வெளிக் கொணர பலமுட்டுக் கட்டைகள் போடப்பட்டன. இந்த முட்டுக் கட்டைகளை வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பிடலாம்.

தற்போது வேலியையே பயிரை மேயவிடாமல் அந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் தகர்த்து
ஆழ்கடல் சோதனை மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் கூறப்பட்டுள்ளதை ஏற்க மறுப்பவர்களுக்கு இந்த ஆய்வு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அருகே அமைந்திருந்த ஜெரிகோ என்ற நகரம் உலகில் பதினோராயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக திழ்ந்து வந்தது. இதை முறியடிக்கும் வகையில் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகார் நகரம் பதினையாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததென இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்ல இந்த நாட்டின் உள்கட்டமைப்பு உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் வியப்பூட்டம் வகையில் பார்த்துப் பார்ந்து கட்டியிருக்கிறார்கள் சோழர்கள். பல நாட்டினர் வந்து வணிகம் செய்வதற்கு வாயப்பாக பெரிய துறைமுகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த துறைமுத்தில் பல கப்பல்கள் நிற்கும்படியும் அவற்றைத் திருப்புவதற்கு வசதியாக கட்டுமானங்களையும் காணக்கூடியதாயுள்ளது.

அது சரி, பவளத்திட்டுக்கும் பழந்தமிழர் கறிக்கும் இங்கு நீ சொல்லிக் கொண்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று மாடசாமி அண்ணாச்சி நினைப்பது எனக்கு புரிகிறது. அவர் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவருக்கு தக்க பதில் தந்தால் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

தமிழர் தலைவன் முருகன் இலங்கைக்கு தம்மக்களை குமரிக்கண்ட அழிவிலிருந்து காப்பாற்றி தெற்கிலிருந்து வடக்கே திரிகோணமலைக்கு அழைத்து வந்தான். தலைவனாக இருந்தவனை கடவுளாக மாற்றி விட்டார்கள். யார் மாற்றினார்கள் எப்படி மாற்றினார்கள் என்பதெல்லாம் பெரியகதை. அதை வேறொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன்.

மதம் என்று ஒன்று பண்டைத் தமிழரிடம் இருந்திருந்தால்தானே கடவுள் என்ற ஒரு கருத்து ஏற்பட்டிருக்கும். இதைச் சொன்னவுடன் என்னை மாடசாமி அண்ணாச்சி ஏற இறங்கப் பார்க்கிறார். அவருக்கு ஒன்றை மட்டும் என்னால் ஒன்றை மட்டும் கூற முடியும். நான் படித்து பாட்டு கேட்டு அறிந்ததைத்தான் சொல்கிறேன்.

-சங்கர சுப்பிரமணியன்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *