இந்தியா

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது. விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாக செல்ல தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி தொடங்கியது.

காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி தேமுதிக தொண்டர்கள் பேரணியை தொடங்கினர். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் அப்படியே பேரணியாக சென்றுள்ளனர்.

கேப்டன் வாழ்க… அரசு ஒழிக… என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணியாக கிளம்பினர். கோயம்பேடு பாலம் வழியாக பேரணி செல்லவிருந்த நிலையில் தற்போது அம்பேத்கர் சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாக பேரணி செல்கிறது.

இந்நிலைியல், குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , த.வெ.க தலைவர் விஜய் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 25, 000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றி பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *