உக்ரெய்னுக்கு எதிரான போர்க் களத்தில் யாழ். இளைஞர்கள்; ரசிய தூதரகம் முற்றிலும் மறுப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரசிய தூதரகம் மறுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரசிய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அண்மையில் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியில் இராணுவ உடையணிந்து பேசிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரசிய இராணுத்தில் இணைக்கப்பட்டு, உக்ரெய்னுக்கு எதிராக போரிடுவதாக கூறியிருந்தனர்.

எனினும், இதனை முற்றிலும் மறுத்துள்ள ரசிய தூதுரகம், இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்றும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தகவல் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். மேலும், இலங்கை ரசியா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் ரசிய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளை வழங்கவும் தயாராகவுள்ளனர்.

மேலும், ரசியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினை மொஸ்கோவில் உள்ள ரசியாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது.

மேலும், மோசடியான முறையில் இலங்கையர்களை ரசியாவிற்கு அனுப்பும் முகவர்கள் குறித்து தூதரகத்திற்கு எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

எனினும், இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *