இந்தியா

“ஆதாரங்களை அழிப்பதில் பொலிஸார் குறியாக உள்ளனர்“: உயரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு

கொல்கத்தா பெண் மருத்துவர் உயிரிழந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது.

இச் சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடம் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இச் சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியொன்றில் உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

உயிரிழந்த பெண்ணின் தாய் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே அரசும், நிர்வாகமும், பொலிஸாரும் எமக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆரம்பத்திலிருந்தே பொலிஸார் ஆதாரங்களை அழிப்பதில் குறியாக உள்ளனர். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்த மக்கள் போராட்டம் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தந்தை கூறுகையில், “அவ்வளவு எளிதாக நீதி கிடைக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எமது பலத்தின் முக்கிய ஆதாரமாக மக்கள் உள்ளனர். அவர்கள் எம்மோடு துணை நிற்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் எங்கள் மகளின் தொலைபேசியை சோதனை செய்யுங்கள். அப்போது உண்மை தெரிய வரும் என உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *