இந்தியா

கொலை வழக்கில் சிறை சென்ற நடிகருக்கு இராஜ உபசாரம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் தேநீர் மற்றும் சிகரெட் உடன் மூன்று பேருடன் மகிழ்வுடன் பேசி கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

கர்நாடகா சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலியான நடிகை பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்ட விதிமுறைகளை மீறி, சிறையில் தர்ஷனுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

நடிகர் தர்ஷனுடன் ரவுடி வில்சன் மற்றும் அவரது மேலாளராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் அந்த புகைப்படம், சிறை விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இவர் கொலை குற்றம் சாட்டப்பட்டவரா? வி.ஐ.பி.,யா என இணையத்தில் விவாதம் கிளம்பி உள்ளது. சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது எப்படி நடக்கும் என்றும் கேள்வி எழுப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறை அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த ரேணுகாசாமியின் தந்தை காஷிநாத் எஸ்.ஷிவானா கூறுகையில், “ரேணுகாசாமி கொலை வழக்கில், பொலிஸார் மீது நம்பிக்கை இருந்தது. இந்த புகைப்படத்தை கண்டதும், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என எண்ணம் வந்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *