முச்சந்தி
அவுஸ்திரேலியாவின் பத்திரிகை சுதந்திரத்திற்கு கரிநாள் ! ஆப்கான் போர்க்குற்றங்களை வெளியிட்டமைக்கு சிறை !! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

உலக பத்திரிகை சுதந்திரத்தில் அவுஸ்திரேலியா தற்போது 39 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை விதித்தன் மூலம் அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என கருதப்படுகிறது.
ஆப்கான் போர்க்குற்றங்கள்:
இராணுவ வழக்கறிஞரான டேவிட் மக்பிரைட்டி ஆப்கானிஸ்தானில் இரண்டு சுற்றுப் பயணங்களைச் செய்தார். ஆப்கானிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்பதனை அவரே முதன்முதலில் வெளிப்படுத்தினார்.
ஆயினும் அவர் இராணுவ இரகசியங்களை திருடி வெளியிட்டார் எனவும் குற்றஞ் சாட்டப்பட்டார். இத்தகவலை அம்பலப்படுத்தியதை மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக் கொண்டிருந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது.
இவர் எவ்வித துன்புறுத்தலை எதிர்கொண்டவர் அல்ல என்றாலும், தற்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அவுஸ்திரேலிய விசில்ப்ளோவர் (Whistle Blower) ஆவார். ஆயினும் ஜனநாயக நாட்டில் உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக டேவிட் மக்பிரைட் தெரிவித்துள்ளார்.
கிழக்கு திமோர் சாட்சியம்:
இதற்கு முன்பாக கிழக்கு திமோரில் அவுஸ்திரேலியாவின் ஒழுக்கக் கேடான உளவுத்துறை செயலை அம்பலப்படுத்த உதவிய பேர்னாட் குலாரேக்கு (Bernard Collaery) 2021 இல் இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அட்டர்னி ஜெனரல் மார்க் ட்ரேஃபஸ் தலையிட்டபோதுதான் காலேரியின் வழக்கு இறுதியில் முடிந்தது.
2009 முதல் 2013 முதல் ஆப்கானில் சிறைக்கைதிகள், விவசாயிகள், பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்களை விசாரணை செய்யவேண்டும் என விசாரணை அறிக்கையை ஆஸி நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
அவுஸ்திரேலியாவின் விசேட வான்சேவை படையணியை சேர்ந்தவர்களே இந்த போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.
ஆயினும் யுத்த குற்றங்கள்்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் இவரையே தண்டித்துள்ளது. ஆயினும் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க முயலவில்லை என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் ஆப்கான் யுத்த குற்றங்கள் தொடர்பில் முதலில் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டவர் என இவர் கருதப்பட்டாலும், இவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. இவர் யுத்தகுற்றவாளியல்ல, மாறாக அதனை அம்பலப்படுத்தியவர் என்பது ஒரு கேலிக்கூத்தான விடயம் என சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ரவான் அராவ் கண்டித்து தெரிவித்துள்ளார்.
மக்பிரைட்டின் சிறைத்தண்டனை ஆனது, உண்மையை அம்பலப்படுத்தும் ஆர்வம் கொண்டுள்ளவர்களிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என மெல்பேர்னை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட நிலையத்தின் பதில் சட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கைச் சுற்றியுள்ள அனைத்து சிக்கல்களுக்கும், அதன் மையத்தில் சில எளிய உண்மைகள் உள்ளன. டேவிட் மெக்பிரைட், ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க் குற்றங்கள் பற்றிய உண்மை விசாரணை அறிக்கைக்கு வழிவகுத்த ஆவணங்களை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாளரிடம் (ABC) கசியவிட்டார். இது சந்தேகத்திற்கு இடமின்றி பொது நலன் சார்ந்தது ஆகும் என அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் பத்திரிகை சுதந்திரச் சட்டங்களின் அடிப்படையில், மெக்பிரைடு தனது செயல்களில் பொது நலன்களை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக அவர் சிறைக்கு செல்கிறார் என ஊடக அறிஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
போரின் வெட்கக்கேடான பதிவுகள்



ஆப்கான் போர்க் குற்றச் சாட்டுக்களையடுத்து நவம்பர் 2020இல் அவுஸ்திரேலியா குறைந்தது 10 சிறப்புப் படை வீரர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவித்தலை அனுப்பியது. இதனை அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) உறுதிப்படுத்தி அறிவித்தது.
இந்த விசாரணைகளின் போது ஒரு போர் வீரக்கலாச்சாரத்தின் வெட்கக்கேடான பதிவுகள் வெளியாகியுள்ளன என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் (ADF) தலைவர் தெரிவித்தார்.இந்த கொலைகள் எவற்றையும் மோதலின் உச்சகட்டத்தின் போது நிகழ்ந்தவைகள் என தெரிவிக்க முடியாதவை என்றும் தெரிவித்தார்.
குற்றவாளியின் நோக்கம் தவறானதாகவோ தெளிவற்றதாகவோ அல்லது குழப்பமானதாகவோ இருந்த தருணத்தில் இந்த குற்றங்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட ஒவ்வொருவரும் யுத்தசட்டங்கள் எவ்வாறு போரிடவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
சில விசேட படைப்பிரிவினர் சட்டத்தினை தங்கள் கைகளில் எடுத்தமையாலேயே இக்குற்றங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆயினும் உண்மையான போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், உண்மைகளை வெளியிட்டு, அம்பலப்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை விதித்தன் மூலம் அவுஸ்திரேலிய ஜனநாயகத்தின் கரிநாள் என கருதப்படுகிறது.
![]()