டெல்லியில் அதிர்ச்சி: குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண்ணை குத்தி கொன்ற சிறுமி

டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் மனைவி மற்றும் 15 வயது மகளுடன் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

இதில், அந்த சிறுமியின் கையை பிடித்து, சோனி முறுக்கியுள்ளார். உடனடியாக சிறுமியை ஹெட்ஜ்வார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுமிக்கு எக்ஸ்-ரே எடுத்துள்ளனர். தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதன்பின்பு, சிறுமியும், தாயும் வீட்டுக்கு வந்தனர். அதன்பின் சோனி மற்றும் சத்பீருடன் மீண்டும் அவர்கள் வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த முறை, சிறுமி கத்தி ஒன்றை எடுத்து வந்து சோனியை வயிற்றில் குத்தியுள்ளார். கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பெண்ணின் வலது கையிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில், சிறுமி சிகிச்சை பெற்ற அதே ஹெட்ஜ்வார் மருத்துவமனைக்கு சோனியை தூக்கி கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இதனை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை நேற்று கைது செய்தனர். அவர் சிறுவர் சீர்திருத்த வாரியத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர். குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயது சிறுமி கத்தியால் குத்தி, படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *