“காதலால் சுட்ட வடு” …. சிறுகதை …. சங்கர சுப்பிரமணியன்.

முகிலன் மருத்துவ மனையில் இருந்து வெளிவந்ததும் அம்மாவிடம் சொன்னது,”இனிமேல் நான் கண்டிப்பாய் புகை பிடிக்க மாட்டேன் அம்மா, என்ன நம்புங்கள்” என்றதுதான். கிட்டத்தட்ட இரண்டு வாரம்சிகிச்சை பெற்றபின் ஓரளவு சுகம் அடைந்தான்.
இடைவிடாஇருமலுடன் எச்சிலில் இரத்தமும் வந்ததால்தான் அவனை மருத்துவ மனையில்சேர்க்கும்படியாயிற்று. அதற்கு காரணம் பாழாய்ப்போன புகைபிடிக்கும்பழக்கம்தான் என்று தெரிய வந்தது.
ஆரம்பத்தில் ஏதோ ஒருஉந்தலினால் ஏற்பட்ட பழக்கம் அவன் சுருள்சுருளாய் புகை விடும்அழகை ரசித்த கல்லூரி மாணவிகளின் தூண்டுதலினால் திரும்ப திரும்ப புகைபிடித்து கடைசியில் அதுவே அவன் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு கொண்டுபோய்விட்டது.

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றபின் நாமக்கல் தனியார்மேல்நிலைப்பள்ளியில் நிரந்தரமாய் ஆசிரியர் வேலை கிடைத்தது. எனவேமேவகோட்டையில் இருந்து தாயுடன் அங்கு சென்று தங்கினான்.
அதேபள்ளியில் இசை கற்றுக்கொடுக்கும் மலர்விழி என்ற ஆசிரியையுடன் பழக ஆரம்பித்த முகிலன் காதலில் விழுந்தான்.
அவர்கள் காதல் நாளோரு இனிமையும் பொழுதொரு இன்பமுமாய் வளர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் சூடான செய்தியாக உலாவரவும் தொடங்கியது.இரண்டு ஆண்டுகள் கழிந்தது. திருமணம் செய்யலாம் என்று முகிலன் பேச்செடுத்தபோது மலர்விழி சரியாக பிடிகொடுத்துப் பேசாமல் தட்டிக்கழிக்கத் தொடங்கினாள்.
சில மாதங்கள் ஓடிய பின்பும் அவளிடமிருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. அதேசமயம் அவள் பழகும்விதத்திலும் அவனால்ஒரு மாற்றத்தைக் காணவும் முடிந்தது. இப்போதெல்லாம் அவள் முகிலை பார்ப்பதையோ பார்த்துப் பேசுவததையோ தவிர்க்கவும் தொடங்கினாள்.அரை இறுதி பரிட்சை விடுமுறையில் நிலக்கோட்டை வந்திருந்த முகிலன் இதையெல்லம் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினான்.

“அன்புமணி வாயேன் கொஞ்சம் வெளியில போயிட்டு வரலாம்” என்றான்.
“எங்கடா போகலாம்?”
“என்கேன்னு சொன்னாத்தான் வருவியா? வான்னா வாடா போலாம்?”
என்று வற்புறுத்தினான்.
அந்த நவீன உணவகத்தில் நுழையும்போதே நான் நினைத்தது சரியாக இருந்தது. நாங்கள் எப்பவாவது நண்பர்கள் கூடும்போது அருந்தும் அந்தமதுவை கொண்டு வரும்படி சொன்னான்.
“டேய், என்ன இது? கத்தி போயி மாம்பழம் வந்தது டும்…டும்…டும் என்று என் பாட்டி சொன்ன கதையாய் இருக்கு. புகபுடிச்சு பட்டதெல்லாம் மறந்துடுச்சா? இப்ப இதுக்கு அடிமயா?”
“அப்படியெல்லாம் இல்லடா. என்ன நம்பு. நான் நாமக்கல் செல்வதற்கு முன் நண்பர்களுடன் கொண்டாடினோமோ நினைவிருக்கிறதா? அதன்பின் இதை நான் தொடவேயில்லை” என்றான்.
“அப்புறம் என்ன? இப்ப என்ன ஆச்சு?”
“இப்ப என்ன ஆச்சா, சொல்றன் கேளு. மலர்விழிக்கும் உதவி தலைமையாசிரியருக்கும் திருமணம் நடக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மை என்பதுபோல இப்பல்லாம் என்னைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்கிறாள்.
இதெல்லாம் எப்படிடா முடிகிறது?” என்றுஅவன் என்னை கேட்கவும் மதுவும் வந்தது. மதுவை கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த ஆரம்பித்த அவனை ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிக்க விடாமல் நிறுத்தினேன்.
அவனும்சரியென்று சொல்ல உணவருந்திவிட்டு நேராக திரையரங்குசென்றோம்.ஒரு முடிவெடுத்து விட்டால் அதில் திடமாக இருப்பான் என்பதை அவன் மதுஅருந்தும்போதும் திரையரங்கில் அவன் புகை பிடிக்காமல் இருந்ததையும் வைத்து நன்கறிந்தேன்.
படம் முடிந்ததும் அவனிடம் ஆறுதலாய் பேசி மலர்விழியை மறந்து விடும்படி அறிவுரை கூறினேன். ஓராண்டு கழித்து முகிலனின் திருமணம் நடந்தது. அதன் பின் மலர்விழிக்கும் இரண்டு மாதங்களில் திருமணம் நடந்ததாக முகிலன் சொன்னான்.
முகிலனின் திருமணவாழ்க்கைநன்றாகவே நகர்ந்தது. மிகவும் அன்னியோன்னியமான தம்பதியாய் மிகவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். அவர்களுக்கு இரண்டுகுழந்தைகளும் பிறந்தன. வருடங்கள் ஓடி பத்து வருடங்கள் கழிந்தன. நிலக்கோட்டை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா.

மும்பையிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு வந்தேன். முகிலனும் திருவிழாவுக்காக வந்திருந்தான். நாங்களும் சந்தித்து எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்டன. ஊர் எல்லாமே மாறியிருந்தது. நாங்கள் வழக்கமாக செல்லும் அந்த நவீன உணவகமும் ஏன் திரையரங்கும்
கூடமாறி புதுப்பெயருடனும் புதுப்பொலிவுடனும் இருந்தது.
அந்த நாள் ஞாபகம் வரவே இப்போது நானே அவனை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்துக்குள் நுழைந்தேன். அவனுக்குபிடித்த மதுவை வரவழைத்து அருந்தத் தொடங்கினோம். அப்போது முகிலன்,
“அன்புமணி! நான் நல்லவனா இல்ல கெட்டவனா? என்றான் திடீரென்று.
ஏது இவனுக்கு போதை தலைக்கு ஏறி விட்டதா? சிறிதுதானே குடித்திருக்கிறான். அதற்குள் என்னவோ மாதிரி பேசுகிறானே என்று நினைத்தபடி,
“டேய்! என்ன இது நாயகன் படத்தில் வரும் வேலு நாயக்கர்கிட்ட பேரன்
கேட்கிற மாதிரிகேட்கிற. படத்திலாவது தாத்தாவிடம் பேரன்
கேள்விகேட்டான். நீ உன்னைப் பற்றி என்னிடம் கேட்கிறாய்?
உன்னைப் பற்றி உனக்குத் தெரியாதா?
“தெரியலையடா, அதானே கேட்கிறேன்“
“ஏன் அப்படிச் சொல்ற?”
“இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறான். நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். என் மனைவி மேல் எனக்கு கொள்ளைப் பிரியம். அவள் இல்லையென்றால் நான் செத்தே போய்விடுவேன்”.
“அதற்கும் நீ கேட்கும் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”
“நிறையவே இருக்கிறது. நான் மலர்விழியை மறந்து என் மனைவியுடன்
மகிழ்ச்சியுடந்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த பத்து வருடங்களுக்குள் என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது.
மலர்விழிக்கும் அவள் கணவருக்கும் தற்போது விவாகரத்து ஏற்பட்டு விட்டது. அவள் கணவன் வேறு ஊருக்கு மாற்றிப்போய்விட்டான்.
அவளும் வேலையிலிருந்து நின்று விட்டாள். இப்போதுஅடிக்கடி அவள் ஞாபகம் எனக்குள் வருகிறது. திருமணமான எனக்குவேறு பெண்ணின் ஞாபகம் வரலாமா, அது தப்பில்லையா? அது நான் என் மனைவிக்கு
செய்யும் துரோகமில்லையா?” என்று கொட்டித்தீர்த்தான்.
அவன் சிறிது குழம்பித்தான் போயிருக்கிறான். நண்பனான எனக்கு அவன் குழப்பத்தை தீர்த்து உண்மை நிலையை எடுத்துரைப்பது கடமை. எனவே நிதானமாக அவனுக்கு யதார்த்தத்தை உணர்த்தினேன்.
“உணக்கு மலர்விழியின் ஞாபகம் வருவதில் தப்பொன்றுமில்லை. நீயும் அவளும் இரண்டு வருடமாக காதலித்து இருக்கிறீர்கள். மனமென்றால் நினைவவு வரத்தான் செய்யும் இல்லவிட்டால் அது மனமல்ல வெறும் கல். அதுவும் இப்போது அவள் வாழ்க்கையை இழந்து நிற்பதால் அவள்
மீதுண்டான அனுதாபத்தால்தான் உனக்கு அவள் நினைவு வருகிறது.
கொஞ்சநாட்களில் அந்த நினைவு மறைந்து விடும். ஆனால் எந்த
காலத்திலும் எக்காரணத்துக்காகவும் உன் மனைவிக்கு நீ துரோகம்
நினைத்துவிடக்கூடாது. அப்படி நினைத்தால்தான் தப்பு” என்று கூறி
அவன் சந்தேகத்தை தீர்த்து வைத்தேன்.
“அப்படியா? இப்போதுதான் எனக்கு மன அமைதி ஏற்பட்டது.
திருமணமானவர்களுக்கு மற்ற பெண்ணைப் பற்றி நினைப்புவரக்கூடாது என்பார்களே அதனால் தான் மனக்குழப்பத்தில் இருந்தேன்.” என்றான்.
“ஓ! அதுவா! அது கயவர்களுக்கும் பிறன் இல் விழைபவர்களுக்கும் மட்டுமே சொல்லப் பட்டது. காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு
அல்ல. இல்லாவிட்டால் அனுபவசாலியான கண்ணதாசன் ‘கடவுள்
மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில்
மூழ்கவேண்டும்‘ என்று பாடியிருப்பாரா?” என்றேன்.
இப்போது அவன் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. துரத்தி வரும்
ஒரு நாயிடதிருந்து அவன் தப்பித்ததைப் போல் உணர்ந்தேன். என்ன
ஒரு அற்புதமான மனிதன் இவன். காதலியின் நினைவு வருவதைக்கூட மனைவிக்கு துரோகம் செய்வதைப் போல எண்ணி வருந்துகிறானே
இவன். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது இதுதானோ? உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி நான் சொல்கிறேன் என்று எங்கோ எப்போதோ படித்த ஞாபகம் வந்தது. இவன் என் நண்பன் என்பதால் என்னையுமறியாமல் பெருமிதம் தொற்றிக் கொள்ள அந்த கர்வத்துடன் அவனுடன் அந்த
உணவகத்தை விட்டு வெளியேறினேன்.
![]()
-சங்கர சுப்பிரமணியன்.
![]()