கதைகள்

“ஈரா” ….. சிறுகதை ….. இரண்டாம் விசுவாமித்திரன்.

  சீனத்தும்மா றசீன் மாஸ்டருக்கு வாண்டு இருபத்தஞ்சி வரிசம்.  தலயில ப்பான் ரெண்டொரு வெள்ளமுடி தெரியிது. அவக்கு தலப்புள்ள பொம்புள.இருபது வயசில ஒரு பொடியனும் இரிக்கான். அவ கொஞ்சம் அடக்கமானவ. புரிசன கேள்வி கணக்குக் கேட்டு கணகாட்டுப் படுத்தமாட்டா.

றசீன் மாஸ்டருக்கு எளம் வயசில வாத்தி வேல கெடச்ச. ஊர்ல அவர எல்லாருக்கும் தெரியும். காணி பூமியெல்லாம் இரிக்கி. ஊட்டுக்காரிய நெல்லா வெச்சிக்கிருந்தாரு.

வேளவு நாளும் ஊர்லதான் படிப்பிச்ச. சும்மா இருந்தாப்போல வாங்காமம் ஊருக்கு மாத்தம் கெடச்சி மாறிப் போனாரு.

சின்னொரு பள்ளிக் கொடம். இருபது கட்டத் தூரம். இரிக்கிற படுக்கிற எல்லாம் பள்ளிக் கொடத்து அறயில தான். அவரோட ன்னமொரு மாஸ்டரும் கூட இரிக்கிறயாம். ராவயில கதிர மேசய ஒழுங்கு பண்ணி வகுப்பறயில படுத்துத் தூங்குவாங்க. ஒரு ஊட்டுல சாப்பாடு. பகல் சாப்பாட பள்ளில படிக்கிற சின்னப் பொடியன் போய் எடுத்துக்கிட்டு வருவான். ராவயில அந்த ஊட்டுல போய் சாப்புடுவாக.

றசீன் மாஸ்டரு கெழமைக்கு ஒருக்கா தப்பாம ஊருக்கு வருவாரு. எப்பிடியும் சனி ஞாயித்துக்கெழம ஊர்ல நிப்பாரு.

“அங்க கரண்டு ல்ல. ராப்பட்டா குப்பி வெளக்குத்தான் பத்த வெய்க்கிற. டோச்சி லைற்ற  புடிச்சிக்கிட்டுத்தான் ராச்சாப்பாட்டுக்குப் போற வாற. பள்ளிக் கொடத்து வளவுக்க கப்பி போட்ட கெணறு ஒண்டு இரிக்கி. அதுலதான் தண்ணி வாக்கிற. தெலாந்து வாளில அள்ளிப் பழகின நமக்கு கப்பிக் கெணறு  கொஞ்சம் கைட்டம்”

மனுசிக்கிட்ட மனந் தொறந்து கதைப்பாரு.

ஊட்டுல நிக்கிற ரெண்டு நாளும் நல்ல சாப்பாடு. சந்தோசமா  புள்ளகளோட பொழுது கழியும். திங்கக் கெழம விடியச்சாமம் ஒடன கண்ண முழிச்சி தலயில குளிச்சி வெளிக்கிட்டு வாங்காமத்துக்குப் பொயித்துருவாரு.

ப்பிடி ஒரு வரிசம் மட்டுல கழிஞ்சிச்சி. கெழமைக்கு ஒருக்கா வாறது  கொறஞ்சி ரெண்டு மூணு கெழமைக்கு ஒருக்காத்தான் வருவாரு.

ஊட்ட வாற செல பொண்டுகள்ர கதயும் சீனத்தும்மாட காதுக்க வேற சாங்கமா  வந்து ஏறிச்சி. றசீன் மாஸ்டரு வேலக்கிப் போன எடத்தில ரெண்டாங் கலியாணம் முடிச்சயாமெண்டு ஊருக்குள்ள அரசல் பொரசலா கதைக்கிறதும் அவக்குத் தெரிய வந்திச்சி.

“ஏன் நீங்க போன கெழம வெரல்ல”                      பொஞ்சாதி கேட்டா.                                                 “பெரயாணம் செய்ர ப்பயெல்லாம் கைட்டமா இரிக்கி”                                                  ப்பிடித்தான் வெளக்கம் சென்னாரு.

வந்தாலும் ஞாயித்துக் கெழம சாய்ந்தரம் பொய்த்திருவாரு.

அதப் பத்தி ஒருநாள் கேட்டா.

“மின்னெண்டா திங்கக் கெழம விடியத்தான் போற. ப்ப ஞாயித்துக் கெழம….” ண்டு இழுத்தா.

அதுக்கும் வேற வெளக்கம் வெச்சிருந்தாரு.

“பள்ளிக் கொடத்தில வேல கொள்ள. காலத்தால வெளிக்கிட்டுப் போனா வேளைக்கி பள்ளிக்கிப் போக ஏலாமக் கெடக்கு”

என்ன இருந்தாலும் பொஞ்சாதிக்கு வெளங்காமலா போகும்? எத்தின நாளக்கி அடக்கி அடக்கி வெச்சிக்கிரிக்கிற.

கெழம லீவில ஒருநாள் ஊட்ட வந்தவருக்கிட்ட தந்திரமாக் கேட்டா.

“ஊருக்குள்ள ப்பிடியொரு கத இரிக்கி. நான் நம்பல்ல…”

“பச்சப் பொய். சனங்கள்ர கதய நம்பப்பொடா. வேணுமெண்டு கத கட்டுங்கள்”

அவரு ஒரே டோக்கா மறுத்தாரு. அவவும் நம்பிட்டா. ஆனா ஊருக்குள்ள கத பெலமா இருந்திச்சி.

பொறகு ஒருநாள் வெசயத்தச் செல்லி சத்தியம் கேட்டா.

மனுசன் ஒரு மாதிரியா ஒத்துக்கிட்டாரு.

“ப்பிடியான நெலமயில ரெண்டு கலியாணம் செய்யலாமெண்டு நம்முட இசுலாம் மார்க்கம் செல்லுது”

காரணம் சென்னாரு.

மனுசி கத்திக் கொளறி அண்டு ராவெல்லாம் நித்திர இல்லாமக் கெடந்தா.என்ன செய்ர. தலயெழுத்து. அத ஆரால மாத்த ஏலும் ண்டு நெனச்சி அவட காலம் கழிஞ்சிட்டு.

றசீன் மாஸ்டரு ஒரு வரிசத்தால ஊருக்கு மாறி வந்தாரு. பக்கத்து ஊர்ல வாடகைக்கு ஊடு எடுத்து ரெண்டாம் பொஞ்சாதியக் கொண்டந்து வெச்சாரு. மாறி மாறி ரெண்டு ஊட்டுலயும் தங்குவாரு.

நாலு மாத்தைக்கி முந்தி சீனத்தும்மாட ஊட்ட நிக்கக் கொள்ள சொகமில்லாம வந்து றசீன் மாஸ்டரு ஒடன உசிர உட்டுட்டாரு.

குளிப்பாட்டி மையத்தத் தூக்கிட்டுப்  போய் பள்ளில மையத்துத் தொழுக தொழுதிட்டு அடக்கம் செஞ்சாக.

ப்ப ரெண்டு பொம்புளகளும் ஈரா இரிக்காக

சீனத்தும்மாட தம்பிக்காரன் வந்து ஈரா வேலி ண்ட பேரில ரெண்டுமூணு கிடுகுகள கொழுவத் தோங்கினான்.

முந்தின காலத்தில ஈரா வேலி கட்ர பெரிய வேல. எல்லார்ர ஊட்டயும் சுத்தி கிடுகு வேலிதான் இரிக்கும். ரோட்டோரத்து கிடுகு வேலியோடச் சேத்து பறன் காலப்போல ஒசரமான ரெண்டு கம்ப நாட்டி கிடுகு வேலிக்கு மேல ன்னொரு வேலி கட்டுவாக. பெலமான வேலியா ல்லாம சும்மா கிடுகுகள கொழுவிக் கொழுவி உடுவாக. ஈரா வேலி ண்டு அதச் செல்ர.

அதப் பாக்கிற சனங்களுக்கு ஈரா இரிக்கிற ஊடு ண்டு தெரிஞ்சிரும். மரியாத குடுத்துப் போவாக. சுன்னத்து மாப்புளய கார்ல ஏத்திக்கிட்டு பீக்கர்ல பாட்டுப் போட்டுக்கிட்டு போக மாட்டாக. கலியாண மாப்புள ஊர்வலமெல்லாம் வேற ரோட்டாலதான் போகும். ஊட்டுல ரேடியோ இருந்தா அத ஈ.ரா முடியிர வெரைக்கும் போடமாட்டாக.

ப்ப காலம் மாறிப் போச்சி. ஈரா வேலி கட்ர ல்ல. ரோட்டுல சத்தம் போட்டு பீக்கரக் கட்டி சாமான் விப்பானுகள்.

சீனத்தும்மாட ஈரா ஊட்டுக்கு பொண்டுகள் வந்துகிட்டு இருந்தாக. அவ பூணாரம் போடாம வெள்ளப் பொடவய உடுத்து முதுகில தலவாணியொண்ட செவரோட முட்டுக் குடுத்து ரெண்டு காலயும் நீட்டி ஒரு காலுக்கு மேல ன்னொரு காலப் பின்னிப் போட்டு கவலயோட பொண்டுகளோட கதச்சிக்கிருந்தா.

ஒருக்கா அவவப் பாக்க வந்த நெருக்கமான ஒரு பொம்புளக்கிட்ட அவ இப்பிடிச் சென்னயாம்.

“நெஞ்சிக்க வலிக்கிது ண்டு சென்னாரு. ஒடன எண்ட சீதேவி கண்ண மூடிட்டாரு. ரெண்டு பொஞ்சாதியயும் சமனாக் கவனிச்சாருதான். புள்ளகளுக்கும் ஒரு கொறயும் வெய்க்கல்ல. அவவ என்ட ஊட்ட கூட்டிக்கரத் தோங்கினாரு. ஆனா நான் உடல்ல. நானும் அவட ஊட்ட ஒருநாளும் போகல்ல. போகயும் மாட்டன்.”

ண்டயோட றசீன் மாஸ்டரு மௌத்தாகி நாலு மாசமும் பத்து நாளும்.

சாமத்துல நேரத்தோட  எழும்பி குளிச்சி ஒழுவெடுத்து  வெள்ள ஒயில் பொடவய உடுத்து தொழுது குர்ஆன ஓதி ஊட்டுக்கார ஆளுக்கு  அல்லாஹ்கிட்ட துஆக் கேட்டு வெட்டல வந்தா.

சீனத்தும்மாட ஈரா முடிஞ்சி. அது செறப்பா முடிஞ்சிட்டு ண்டு அவட மனம் சந்தோசப்பட்டிச்சி.

ஈரா ஊட்டுக்க இரிக்கக் கொள்ள நடந்த செல வெசயங்கள நெனச்சிப் பாத்தா.

சீனத்தும்மாட ஒடன் பொறந்த தம்பிக்கி வாண்ட அவட மதினி ஒருக்கா அவவ  பாக்க வந்த. மௌத்துக்கு நிண்டு போனவ அடிக்கடி அவவப் பாக்க வருவா. ப்பிடித்தான்

ஒருக்கா வந்தா. அன்னேரம் தம்பிரபொண்டி எசாக்காரி. ரெண்டு மாசம். அவவ உள்ளுக்கு அறைக்க வெர உடல்ல.

ஈரா இரிக்கிற ஆக்கள எசாக்காரிகள் பாக்கப் பொடா ண்டு செல்லுவாக. மார்க்கச் சட்டத்துக்கு அது பொளயாம். வகுத்தில இரிக்கிற புள்ள ஆம்புளப் புள்ளயா இருந்தா ஈரா

 முறிஞ்சிருமாம்.அதாலதான் அவட மதினியப் பாக்க உடல்ல.

ஓதிப்படிச்ச ஒலமாக்கள் ந்த வெசயத்த ஒத்துக்கிற ல்ல. நானும் எத்தினயோ தெரம் என்ட காதால கேட்டிரிக்கன்.இசுலாத்துல ல்லாததெல்லாம் ஞ்சான் குடியிரிக்கி ண்டு செல்லிப்போட்டு மதினி கோவிச்சிக்கிட்டுப் பொய்த்தா.

மொதல்ல அந்த மதினியத்தான் போய்ப் பாக்கணும் ண்டு சீனத்தும்மா நெனச்சிக்கிட்டா.

“ஈரா முடிஞ்ச ஒடன பொறம்பான ஆம்புளய மொதலாவதா பாக்கிறதுக்குத்தான் பாத்தியா ஓத ஓதிப் படிச்ச லெப்பயக் கூப்பிர்ர.”  புள்ளகளுக்குச் சென்னா.

மகனுக்கிட்ட “ ண்டயோட ஈரா முடியுது. வாப்பாக்கு சொர்க்கம் கெடைக்க துஆக் கேட்டு பாத்தியா ஓதனும். நீங்க போய் லெப்பய வெரச் செல்லுங்க.”

லெப்பைக்கி வெசகளம் செல்லிட்டு மகன் வந்தான். அவன வெரக்கொள்ள மணக்குச்சி ஒரு பக்கட்டும் கல்க்கண்டும் ஞ்சி விசுக்கத்தும் வாழப்பழம் ஒரு சீப்பும் வாங்கிட்டு வெரச் சென்னா

சீனத்தும்மா வெளிய வந்ததக் கேள்விப்பட்டு அவவ பாக்க சொந்தக்கார ஆக்கள் அல்லயல்கார ஆக்கள் தெரிஞ்ச ஆக்கள் ண்டு பல பொண்டுகள் வந்து வந்து போனாக.

அவகளோட ராவு கனவுல புரிசன் வந்தத கதச்சிக்கிட்டு இருந்தா.

செல பொம்புளகள் சீனத்தும்மாட காதுக்க ஒரு வெசயத்தப் போட்டாக.

“ஒங்குட ஊட்டுக்கார ஆளுக்கு மத்தப் பொம்புள ரெண்டாந் தாரமா  வாண்டவ. மாஸ்டரு கண்ண மூடக் கொள்ள அவக்கு மாசம். அவவும் ஈரா

இரிக்கா. நாலு மாசமும் பத்து நாளும் ண்ட கணக்கு புள்ளத்தாச்சிமாருக்கு ல்ல. புள்ள பொறக்கிற வரைக்கும் புள்ளத்தாச்சிக்கு நாள் கணக்கு  இரிக்கும். அதால அவட ஈரா முடிய ன்னம் ரெண்டு மூணு மாசமாவது போகும். ஒங்கிட முடிஞ்சி. பழய கோவத்த உட்டுட்டு நீங்க அவவப் பாக்கப் போறது நெல்லது.”

ஆரு என்ன செல்லியும் சீனத்தும்மா எணங்கல்ல.

“என்ட ஒடம்புல உசிரு இரிக்கிர வெரைக்கும் அவள்ள வாசல்ல காலடியும் படமாட்டா”

சறமும் மறமுமா நடக்காது ண்டு செல்லிட்டா.

லெப்பையும் மோதினும் வந்தாக. எல்லாம் முடிஞ்ச பொறகு சீனத்தும்மாக்கிட்ட லெப்ப ஒரு கேள்வி கேட்டாரு.

“கபுராளிர ரெண்டாம் பொஞ்சாதி ஈரா இரிக்கா. பாக்கப் போகல்லியா”

போக மாட்டன் ண்டு மொகத்தால குறிப்புக் காட்டினா.

அன்னேரம் அவரு ஒரு வெசயம் சென்னாரு.

“புருசன் மௌத்தாகினா ஈரா கடம மொறயா  நெறவேறனும். அது மறுமயில புரிசனுக்கு ஒதவும். ஈராவுல இரிக்கிற பொஞ்சாதிமார்ர கைலதான் அது இரிக்கி. ரெண்டு பொஞ்சாதியயும் சமமா கவனிக்கிற ஆம்புளதான் ரெண்டாவது  முடிக்கலாம் ண்டு நம்முட மார்க்கம் செல்லுது. ஒங்க ரெண்டு பேரயும் அவரு சமமா கவனிச்சிருக்காரு ண்டு வெளங்குது. புரிசன்ட நலவுக்காக நீங்க அவவ போய் ஒருக்கா பாக்கிற நெல்லம்”;

லெப்ப சென்னாரு

சீனத்தும்மா ஒண்டும் செல்லெல்ல.

அண்டு அசறுக்குப் பொறகு மகளக் கூட்டிக்கிட்டு சீனத்தும்மா ரெண்டாம் பொஞ்சாதிர ஈரா ஊட்டுக்குப்  பொய்த்துக்கிட்டிரிக்கா.

ஊடு கிட்ட வெரக் கொள்ள “புரிசன் உசிரோட இருந்த. அன்னேரம் ஒறவு தேவல்ல. ப்ப என்னத்துக்கு அவ வரணும்” ண்டு ரெண்டாம் பொஞ்சாதி நெனப்பாவோ? ண்டு சீனத்தும்மாட மனம் கொளம்பத் தோங்குது.

 

———————————————–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *