கட்டுரைகள்

 காலத்தால் அழியாத கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் : —- ஐங்கரன் விக்கினேஸ்வரா

இன்றைய நாளில் மே 5, 1818 இல் ஜெர்மனியில் பிறந்த கார்ல் மார்க்ஸ் (Karl Marx), அவரது காலத்தில் அவர் புரட்சியாளர், சமூகவியலாளர், வரலாற்றாசிரியர், பொருளாதார நிபுணர் என பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர்.

எவ்வாறு கூறினாலும், மார்க்சியம் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு தான். தத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாற்று அறிவியல் மற்றும் சோசலிச சிந்தனையின் வளர்ச்சியில், மார்க்சியம் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு. வாழும் படைப்பாற்றல் தொடர்ச்சியானது. மார்க்சியம் ஒரு வளர்ந்து வரும் சமுதாயத்திற்கான தத்துவம். அதன் வலிமையைப் பெறுவது ஒரு சமூக நடைமுறையான வாழ்க்கையிலிருந்து தான்.

மார்கஸ் துவங்கிய போராட்டங்கள்:

உழைக்கும் தொழிற்சங்க உரிமை, தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், பணிநேரம், ஓய்வூதியம், மக்களுக்கான நலத்திட்டங்கள், அரசாங்கமே நடத்தும் பொதுத்துறைகள், கல்வி – சுகாதாரம் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டியதின் முக்கியத்துவம், அறிவியல் பார்வையின் அவசியம் அனைத்தும் மார்க்ஸ் துவங்கி வைத்த போராட்டத்தின் அறுவடைகள் தான்.

அதனாலேயே மார்க்சியம் என்பது மனித சிந்தனையின் அனைத்து புதிய சாதனைகளையும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் ஒரு புரட்சிகர இயக்கமாகும். இயற்கை, சமூகம், மனித சிந்தனையின் வளர்ச்சி, இயக்கவியல், வரலாற்றுப் பொருளைச் சிறப்பாக நிர்ணயிக்கும் பொது வாதத்தின் மூலம் உலகை அறிந்து கொள்வதும் மார்க்சியம் மூலமே.

உலகின் புரட்சிகர மாற்றத்திற்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்,

அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கெல்சுடன் இணைந்து 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் உலகப் புகழ் பெற்ற நூலை வெளியிட்டார்.அதன் காரணமாக கார்ல் மார்க்ஸ் சரித்திர நாயகனாகிவிட்டார்.

கார்ல் மார்க்ஸின் எக்காலமும் அழியாத சிந்தனைகள் இன்றைய உழைக்கும் மக்களின் மூலதனமாகும்.

கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையானது பாட்டாளி வர்க்கத்தின் துயரங்களுடன் பின்னிப் பிணைந்தது. வக்கீல் குடும்பத்தில் பிறந்த கார்ல் மார்க்சும் வறுமையில் வாழ்ந்தவர்.

மூலதனம் மக்கள் உடமை :

புரட்சியை நோக்கிய காலக்கட்டத்தில் தான் பிரபல ‘மூலதனம்’ என்ற நூலை மூன்று தொகுதிகளாக எழுதினார்.

நண்பர் ஏங்கெல்ஸுடன் இணைந்து தொகுத்த கார்ல் மார்க்ஸின் நூல்கள் , மனிதகுலத்தை எல்லாவிதமான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களிலிருந்தும் விடுவிக்கும் என்பதை நிரூபிக்க வழிகாட்டியது.

கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ முதல் தொகுதி 1867 இல் வெளியிடப்பட்டது. இரண்டாம் தொகுதி அவரது மரணத்திற்குப் பின் 1885 இல் வெளியிடப்பட்டது. மற்றய தொகுதிகள் 1894 இல் வெளிவந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலிருந்து இன்றைய ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், உழைக்கும் மக்களிடையே அவரது போதனையின் செல்வாக்கு எவ்வாறு வளர்ந்தது என்பதை நாம் தெளிவாகக் காணலாம்.

பல ஆண்டுகள் ஆய்வு செய்து தாஸ் கேப்பிட்டல் அல்லது மூலதனம் எனும் பொருளாதார ஆய்வு நூலானது,

இன்றைய பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது, அதன் முரண்பாடுகள் என்ன, அந்த முரண்பாடுகள் என்ன நெருக்கடிகளை ஏற்படுத்தும், உலக நாடுகளுக்கிடையே போர் வருவதற்கு காரணம் என்ன என்று அபாரமாக விளக்கியுள்ளார். அந்த நூலை படித்துப் புரிந்து கொள்வதற்கு நமக்கு வரலாறு, இலக்கியம், பொருளாதாரம், கணிதம், சமூகவியல், அறிவியல் போன்ற பல்துறை அறிவுப் பரிச்சயம் இருந்தால் புரிதல் சாத்தியமாகும்.

கார்ல் மார்க்ஸ் இறந்த பிறகும், அவருடைய கருத்துக்கள் பாட்டாளி வர்க்கத்தின் ஒளிரும் ஆயுதங்களாகவே இருக்கின்றன. கார்ல் மார்க்சின் கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.

கார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 அன்று இலண்டனில் காலமானார். இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்தார்.

மார்க்ஸ் இறந்த போது அவரது நண்பர் ஏங்கெல்ஸ், “ மனித குலத்தில் ஒரு தலை குறைந்து விட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எழுதினார். உண்மையிலேயே அது பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைதான்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *