2000 கி.மீ தூரத்தில் மனைவி.. பார்த்து 2 வருஷமாச்சு.. இவர்தான் சூப்பர் புருஷன்!
மும்பையில் வசித்து வரும் தனது மனைவியைக் காண வியட்நாமைச் சேர்ந்த கணவர், கடல் மார்க்கமாக சாதாரண ரப்பர் படகில், எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்காமல் கிளம்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்தவர் ஹோ ஹோவாங். இவரது மனைவி மும்பையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 வருடமாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 2 வருடமாக மனைவியைப் பார்க்க முடியாமல் தவித்து வந்த ஹோ ஹோவாங் எப்படியாவது மனைவியைச் சந்திக்க முடிவு செய்தார்.
இதையடுத்து வியட்நாமிலிருந்து பாங்காக் போனார். அங்கிருந்து இந்தியா வர முயற்சி செய்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் தனது முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பாங்காக்கிலிருந்து புக்கெட் தீவுக்குப் பயணித்தார். அங்கு போன அவர் ஒரு ரப்பர் படகை வாடகைக்கு எடுத்தார்.
கையில் கொஞ்சம் குடிக்க தண்ணீர், கெஞ்சம் நூடுல்ஸ் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்பி விட்டார். கடலில் செல்லும்போது வழிகாட்டக் கூடிய கேம்பஸ் கருவியோ, வரைபடமோ, ஜிபிஎஸ் கருவியோ எதுவுமே அவரிடம் இல்லை. ஜஸ்ட் லைக் தட் போட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
அவர் கிளம்பி புக்கெட் தீவிலிருந்து மும்பை கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. சிமியன் தீவு பகுதியில் கடலில் ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை தாய்லாந்து கடற்படையினர் கண்டு மீட்டனர். பின்னர் அவரை மீண்டும் புக்கெட் தீவுக்கே அழைத்து வந்தனர். 37 வயதான ஹோவாங் தனது முயற்சி குறித்து அதிகாரிகளிடம் கூறுகையில், எனது மனைவி கடந்த 2 வருடமாக மும்பையில் வேலை பார்க்கிறார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் படகில் கிளம்பினேன் என்று கூறியுள்ளார்.
ஹோவாங் குறித்து வியட்நாம் தூதரகத்திற்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அதேபோல அவரது மனைவியைத் தொடர்பு கொள்வதற்காக இந்திய தூதரகத்திற்கும் தகவல் தரப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
![]()