நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை; தாயை இழந்து தவிக்கும் குட்டி!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (56). லாரி டிரைவர். இவரது மனைவி பாக்கிய லட்சுமி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த தம்பதி வீட்டில் கிளி, புறா உள்ளிட்ட பறவைகள், மீன்கள் வளர்த்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்த பொமோரியன் வகை நாய் ஒன்றையும் கடந்த 2009ம் ஆண்டு முதல் தம்பதி குடும்பத்தில் ஒருவரை போல வளர்த்து வந்தனர். இந்த நாய்க்கு பொம்மி என்ற பெயர் சூட்டி கடந்த 13 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர்.

இதற்கிடையே பொம்மி 3 குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை எடுத்து அந்த குட்டிக்கும் குட்டி என்றே பெயர் சூட்டி இரு நாய்களையும் குழந்தைகள் போன்றே பாசம் காட்டி வளர்த்து வந்தனர். மீதம் இருந்த 2 குட்டிகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டனர்.

இந்த நிலையில் பொம்மி நாய்க்கு கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. எனவே அதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வேளைக்கு வேளை உணவு மற்றும் சத்தான பொருட்கள் வழங்கி வந்தனர்.

இடை இடையே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையும் வழங்கி வந்தனர். இந்நிலையில் பொம்மி நாய் நேற்று உயிரிழந்தது. இதனால் ஆறுமுகநயினார் மற்றும் அவரது மனைவி பாக்கிய லட்சுமி மற்றும் மகன்கள் மனம் உடைந்தனர்.

தற்போது ஆறுமுக நயினார் வேலை நிமித்தமாக குஜராத்தில் உள்ளார். ஆசை ஆசையாக வளர்த்த நாய் இறந்த செய்தியை கேட்டதும் அவரும் போனிலேயே கதறி துடித்துள்ளார்.

இதையடுத்து குடும்பத்தில் ஒருவராக வளர்த்து பராமரித்த நாய்க்கு சிதம்பரபுரம் ஊருக்கு மேற்கே சந்திரங்காட்டில் உள்ள தங்களது நிலத்தில் நாயை அடக்கம் செய்து கல்லறை கட்டியுள்ளனர்.

இறந்த 41வது நாளில் நாய் பொம்மி படத்தை கல்லறையில் பொருத்த தற்போது ஏற்பாடுகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இதற்கிடையே பொம்மி ஈன்ற குட்டி என்கிற நாயும், தாயை இழந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உணவு சாப்பிடாமல் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது. இந்த சம்பவம், கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *