ஆளுநருக்கு எதற்கு பல்கலைக்கழக வேந்தர் பதவி? கிழித்தெடுக்கும் பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு கல்வி அமைச்சரையே வேந்தராக நியமிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் சேலத்தில் 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாக உள்ளன. இங்கு மட்டுமல்ல, பல மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்கப்படுவது பல விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக கல்வித்துறை அமைச்சரையே பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும். வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடைகளை காடுகளில் மேய்க்காமல் சென்னையிலா மேய்க்க முடியும்? நீர்நிலைகளைக் காக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் 100 ஆண்டுகால குடியிருப்புகளை அகற்றுவது ஏற்புடைய செயல் அல்ல.

நீதிபதிகள் அரசியல் சாசன விதிகளை மீறி உத்தரவை பிறப்பிக்கிறார்கள். மத ரீதியான கொள்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்களில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் அரசியல் தலையீடு உள்ளது. பணி ஓய்வு பெற்ற பிறகு கெளரவ பதவிகள் கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் நீதிபதிகளின் செயல்பாடுகள் உள்ளன” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *