கொல்கத்தா: புத்தக திருவிழாவில் திருடிய தொலைக்காட்சி நடிகை கைது..!

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்றது.அங்கு நேற்று முன்தினம் சென்ற தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா, குப்பைக்கூடை ஒன்றில் ஒரு பணப்பையை (பர்ஸ்) எறிவதை போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டார். அதுகுறித்து நடிகை ரூபா தத்தாவை விசாரித்தபோது, அவர் தடுமாற்றமாய் பதிலளித்தார்.

அதில் சந்தேகம் அடைந்து நடிகையின் ‘பேக்’கை பரிசோதித்தபோது அதில் பல பணப்பைகளும், ரூ.75 ஆயிரம் பணமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பணப்பையை குப்பைக்கூடையில் போட்டு, அதை மற்றவர்களுடையதா என்று கேட்டு அவர்கள் கவனத்தை திசை திருப்பி அவர்களது பணப்பையை திருடுவதை நடிகை ரூபா தத்தா வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் அவரை ஐ.பி.சி. பிரிவு 379 (திருட்டு) மற்றும் 411 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்த போலீசார், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த நடிகை ஏற்கனவே ஒரு சர்ச்சையில் சிக்கியவர்தான். பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டிய இவர், அதற்கு ஆதாரமாக சமூக வலைதள ‘சாட்டிங்’ படம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் அது அனுராக் என்ற பெயர் கொண்ட வேறு ஒரு நபருடன் நடந்த உரையாடல் என்பது தெரியவந்ததால் நடிகையின் குட்டு உடைபட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *