ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட, உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை மாணவர்!
தமிழகத்தை சேர்ந்த மாணவர் சைனிகேஷ். இவர் கோவையை பூர்விகமாக கொண்டவர். உக்ரைன் கார்க்கிவ் நகரில் ஐந்தாண்டு கல்வி பயில சென்ற சைனிகேஷ் ராணுவத்தின் மீது ஏற்கனவே இருந்த பற்று காரணத்தால், உக்ரைன் படையில் சேர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக போரிட முடிவு செய்துள்ளதாக தகவல்
சைனிகேஷ் ரவிச்சந்திரன் எனும் கோவையை சார்ந்த தமிழக மாணவர், ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவர், போரில் பங்கெடுத்துக் கொள்ள தன்னார்வமாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக அறியப்படுகிறது.
21 வயதே ஆன தமிழக இளைஞர் சைனிகேஷ் இரண்டு முறை இந்திய ராணுவத்தில் சேர முயற்சி செய்து உயரம் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டவர் என அறியப்படுகிறது. சைநிகேஷ் ரவிச்சந்திரன் Aerospace engineering படித்துவரும் மாணவர் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி மூலம் அறியப்படுகிறது.
சைனிகேஷின் பெற்றோர்களை சந்தித்து நேரடியாக விசாரித்து இந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், சைனிகேஷ் அறையில் நிறைய ராணுவ வீரர்கள் புகைப்படங்கள் இருந்ததை விசாரணை குழுவில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறி இருக்கிறார்.
சைனிகேஷ் 12ம் வகுப்பு முடித்த உடன் இந்திய ராணுவத்தில் சேர ஆர்வமாக இருந்ததாகவும். ஆனால், இவரது உயரம் காரணமாக ரிஜக்ட் செய்யப்பட்டதாகவும், மேலும் சைனிகேஷ் அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்கும் முயற்சிகள் எடுத்து தோல்வியுற்றிருந்தார் என பெற்றோர் கூறிய தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2018ல் உக்ரைனின் கார்க்கிவ்ல் இருக்கும் நேஷனல் ஏரோ ஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு கல்வி பயில சென்றிருக்கிறார் சைனிகேஷ். இந்த படிப்பு வரும் ஜூலை 2023 முடிவடைய இருந்த தருணத்தில் தான், சைனிகேஷ் உக்ரைன் – ரஷ்யா போரில், உக்ரைன் நாட்டுக்காக, அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து போரில் கலந்துக்க கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த சைனிகேஷின் உறவினர்கள், அவரது முடிவை மாற்றி, உடனடியாக வீட்டுக்கு வர அழைத்துள்ளனர். ஆனால், சைனிகேஷ் மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்சமயம், சைனிகேஷின் பெற்றோர் மாநில, ஒன்றிய அரசுகளின் உதவியை நாடி, எப்படியாவது தங்கள் மகன் சைனிகேஷை திரும்பி அழைத்து வர முயற்சி எடுத்து வருகின்றனர்.
![]()