கட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!…. அங்கம் 54 …. முருகபூபதி.

வீரகேசரி 50 ஆண்டுகள் நினைவுகள் !

எமக்கு சக்கரை சாதம், நிர்வாகத்தலைவர் குடும்பங்களுக்கு பெலி டான்ஸுடன் விருந்து !!

“ உழைப்பாளியின் வியர்வை காயுமுன்னர் அவனுக்கான ஊதியத்தை வழங்கு “ ( புனித அல் – குர்ஆன் )

முருகபூபதி.

 

எனது எழுத்தும் வாழ்க்கையும் என்னும் இத்தொடர் எனது எழுத்துலக வாழ்வின் கதை மாத்திரமல்ல. என்னோடு இணைந்தும் இணையாமலும் வந்தவர்கள் பலரதும் கதையாகும்.

அவர்களிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் முடிந்தவரையில் பதிவுசெய்துவருகின்றேன்.

வீரகேசரி அலுவலகத்தினுள் 1977 முதல் 1987 தொடக்கம் வரையில் பணியிலிருந்தமையால், அங்குள்ளவர்கள் அச்சமயங்களில் மேற்கொண்ட பணிகள், மற்றும் அவர்களது பிற துறைகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே கடந்து செல்லவிரும்புகின்றேன்.

வீரகேசரியில் ஒரு காலத்தில் மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ. ராமசாமி ஐயங்கரும் ஆசிரியராக பணியாற்றியவர் என்பதை முன்னர் வெளியான அங்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.

புதுமைப்பித்தனுக்கும் இங்கு வந்து பணியாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் தமிழ்த்திரைப்படம் ஒன்றுக்கு வசனம் எழுதச்சென்றமையால், அந்த வாய்ப்பை இழந்தார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பின்னாளில் மாறிய ஸ்ரெனிஸ்லஸ் என்ற இயற்பெயரையும் கொண்டிருந்த அன்டன் பாலசிங்கமும் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்தான்.

படைப்பிலக்கியவாதிகள் அ.ந. கந்தசாமி, கே. கணேஷ். செ. கதிர்காமநாதன், சில்லையூர் செல்வராசன், அ.ச. முருகானந்தன், அங்கையன் கைலாசநாதன், க. சட்டநாதன், யோகா பாலச்சந்திரன், கமலா தம்பிராஜா, கே. விஜயன், மூர்த்தி, சோமசுந்தரம்

ராமேஸ்வரன், கவிஞர் ஸி. எஸ். காந்தி முதலானோரும் அங்கு ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்கள்தான்.

பின்னாளில் தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக திகழ்ந்த கு. மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் அங்கே பணியிலிருந்தவர்.

யாழ்நங்கை என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்கள்தான் அங்கு நீண்ட நெடுங்காலம் சேவையாற்றிய மூத்த எழுத்தாளர்.

அவர் இந்த ஆண்டுதான் அங்கிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

பிற்காலத்தில் புகழ்பெற்ற பத்திரிகையாளராக விளங்கிய எஸ். எம். கோபாலரத்தினம் முன்னர் வீரகேசரியில்தான் பணியாற்றினார். இவர்பற்றியும் முன்னர் விரிவான பதிவொன்றை எழுதியிருக்கின்றேன்.

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும், பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் காசிநாதனும் முன்னர் வீரகேசரி ஆசிரியபீடத்தில் சேவையாற்றியவர்.

அங்கு பணியாற்றிய சிலர் நாடக, திரைப்பட கலைஞர்களாகவும் அறிமுகமானவர்கள். எஸ். என். தனரத்தினம் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் கோவூர் அவர்களை சந்தித்து, அவரது அனுபவங்களை கேட்டு பதிவுசெய்த நூலொன்றையும் வீரகேசரி பிரசுரம் வெளியிட்டுள்ளது. தனரத்தினம் நாடக திரைப்பட நடிகருமாவார்.

அந்த நூலில் இடம்பெற்ற உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் நம்பிக்கை என்ற நாடகமும் மேடையேறியது. அதில் கோவூராக நடித்தவரான ஜோர்ஜ் சந்திரசேகரனும் சிறிது காலம் வீரகேசரியில் பணியாற்றியவர்.

ஆர். திவ்வியராஜன் என்ற அலுவலக நிருபர் நாடக, திரைப்படக்கலைஞர். மரைக்கார் ராமதாஸின் மற்றும் ஒரு படமான ஏமாளிகள் திரைப்படத்திலும் நடித்தார். பின்னாளில் அரசியல் பிரவேசம் செய்தார். அமைச்சர் காமினி திஸாநாயக்காவுக்கும் நெருக்கமாக இருந்தார். மித்திரனில் தொடர்கதைகள் எழுதியவர்.

இவர் எழுதிய ஒரு தொடர்கதையால் ஒரு பிரபல தொழிற்சங்கவாதி மேலிடத்திற்கு புகாரிட்டதையடுத்து, பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், பூலான் தேவி, பட்லி, ஜமேலா முதலான விறுவிறுப்பான தொடர்களை எழுதிய மித்திரன் துணை ஆசிரியர் ஜீ. நேசனை அழைத்து, அந்த தொடர்கதையையே மாற்றி எழுதச்சொல்லி விரைவில் முடித்துவைத்தார்.

நான் அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிய வேளையில் நவராத்திரி காலம் வந்தது.

வீரகேசரி ஊழியர் நலன்புரிச்சங்கம் அந்த ஆண்டு கலைமகள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கு விரும்பியது. சங்கத்தின் செயலாளர் எஸ். எம். கார்மேகம், வீரகேசரியின் அனைத்து பிரிவுகளிடமிருந்தும் நிகழ்ச்சிகள் கேட்டிருந்தார்.

என்னை அவர் அழைத்து நவராத்திரி மகிமை பற்றி உரையாற்றச்சொன்னார். பின்னர் அவரிடமிருந்து வந்த நிபந்தனை ஆச்சரியத்தை தந்தது.

அந்த நிபந்தனையை மேலிடம் தெரிவித்திருக்கிறது.

நான் பேசவிருக்கும் உரையை பிரதம ஆசிரியர் – பொது முகாமையாளர் முன்னிலையில் பேசிக்காண்பிக்கவேண்டும். அக்காலப்பகுதியில் அங்கு தொழிற்சங்கம் இயங்கியது. நானும் அதில் இணைந்திருந்தேன்.

அது சமசமாஜக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனத்தில் இணைந்திருந்த சங்கம். அதன் செயலாளர் சாமி அண்ணன் என்பவர் அங்கு அச்சுக்கோப்பாளர். அவரது அண்ணன் தியாகராஜா வீரகேசரியில் சிரேஷ்ட ஊடகவியலாளர். அத்துடன் நாடாளுமன்ற செய்தியாளர். சமசமாஜக்கட்சியின் தீவிர ஆதரவாளர்.

எனது நவராத்திரி சம்பந்தப்பட்ட உரையை எழுதியே கொடுத்தேன். அதனையே பிரதம ஆசிரியர் – பொதுமுகாமையாளர் முன்னிலையில் மூடிய அறையில் ஒப்புவித்தேன்.

வீரகேசரியின் நிருவகம் இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர்கள் ஞானம், வென்ஸஸ் லாஸ், காளியப்பா பிள்ளை, கிருஷ்ணா கோப்பிரேஷன் செல்வநாதன் மற்றும் சமகாலத் தலைவர் குமார் நடேசனின் தந்தையார் நடராஜா அச்சகத்தின் உரிமையாளர் நடராஜா ஆகியோரிடமிருந்தது.

ஒரு கால கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையார் எஸ்மண்ட் விக்கிரமசிங்காவும் வீரகேசரி நிறுவனத்தின் தலைவராக விளங்கியவர்தான்.

பலரதும் கையிலிருந்து அதன் நிருவாகம் காலத்திற்கு காலம் கைமாறியிருக்கிறது.

அந்த நவராத்திரி விழாவுக்கு வீரகேசரி நிறுவனத்தின் தலைவர், மற்றும் நிருவாக இயக்குநர் உட்பட அனைத்து இயக்குநர் சபை உறுப்பினர்களும் வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

சொன்னதனால், நாம் இடக்கு முடக்காக பேசிவிடக்கூடாது என்பதில் எமது பிரதம ஆசிரியரும் பொது முகாமையாளரும் எச்சரிக்கையாக இருந்தனர்.

அந்த முதலாளி வர்க்கத்தின் நம்பிக்கைக்குரிய சேவையாளர்கள் அவர்கள். அவர்களைச்சொல்லிக்குற்றமில்லை. அவர்கள் வகித்த பதவிகள் அத்தகையது.

1983 கலவரத்தின்போது மேல் மட்ட வர்க்கம் பாதுகாப்புடன்தான் இருந்தது. ஆனால், அவர்களின் விசுவாசிகள் அனைவரும் சாதாரண மக்களைப்போன்று அந்த கலவர காலத்தில் அகதியானார்கள் என்பது வேறு விடயம்.

வீரகேசரி நிறுவனத்தலைவர் ஞானம் கொழும்பில் பெரிய வர்த்தகப்புள்ளி. சின்டெக்ஸ் புடவை ஆலை, சென். அந்தனீஸ் குரூப் ( எஸ்லோன் பைப் உற்பத்தியாளர் ) முதலானவற்றின் உரிமையாளர். அத்துடன் பின்னாளில் ஜப்பான் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து திருகோணமலையில் மிட்சூய் சீமெந்து ஆலையையும் தொடக்கியவர்.

அவர் அத்துடன் நிற்கவில்லை. அவருக்கும் ஒரு தமிழ்த்திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதிலும் வசூல் அள்ளித்தரக்கூடிய நாயகன்தான் அவருக்கும் தேவைப்பட்டது. 1975 இல் வெளிவந்த எம். ஜி. ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தின் ஃபைனான்ஸியர் ஞானம்தான் என்பது வெளியுலகம் அறியாத இரகசியம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஏவி. மெய்யப்பச்செட்டியார், ஜெமினி வாசன், சின்னப்பா தேவர், விஜயா – வாகினி நாகிரெட்டி முதலான தமிழ்த்திரையுலக பெரும் புள்ளிகளையும் இன்னோரன்ன தயாரிப்பாளர்களையும் பார்த்து வளர்ந்தவர்.

அவருக்கு திரைப்படத்தின் இயக்குநரும், வசன கர்த்தாவும் பாடலாசிரியரும்தான் மிக மிக முக்கியம். அவர்களால்தான் தனது படம் ஓடும். ஓடும் விதமாக காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் தன்னுடன் இணைந்து நடிக்கும் நாயகியும் வில்லனும்தான் அவருக்கு மிக மிக முக்கியம். தயாரிப்பாளர்கள் – ஃபைனான்ஸியர்கள் குறித்து அவர் அலட்டிக்கொள்வதில்லை.

அத்துடன் உரிய நேரத்திற்கும் அவர் படப்பிடிப்புக்கு வரமாட்டார்.

இந்த சினிமா சூத்திரங்கள் எதனையும் அறியாத, என்றைக்குமே தனது தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வருவாய் பற்றியே சிந்தித்துவந்த ஞானம் அவர்கள் நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பு

தளத்திற்குச்சென்று எம்.ஜி. ஆரின் வருகைக்காக பல மணிநேரம் காத்திருந்தார்.

தாமதித்து வந்த எம். ஜி. ஆருக்கு ஞானம் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்றார்.

தனது பணத்தில் நடிக்க வந்தவர் மீது கோபம் வருமா..? வராதா..?

இலங்கை திரும்பியதும் வீரகேசரி வாரவெளியீட்டில் எம். ஜி. ஆரின் ஒளிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்று நிபந்தனை போட்டுவிட்டார்.

அக்காலப்பகுதியில் வீரகேசரிக்கு தமிழ் சினிமாப்படங்கள் தொடர்பான செய்திகளை படங்களை விநியோகித்து வருமானம் தேடிக்கொண்டிருந்தவர்தான் கதம்பம் என்ற மாத இதழை நடத்திக்கொண்டிருந்த கே. வி. எஸ். மோகன்.

இவர்தான் வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவரும் ரஜனி என்ற புனைபெயரில் மித்திரனில் மர்ம நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவருமான கே. வி. எஸ். வாஸ்.அவர்களின் மகன்

ஞானம் அவர்கள் இலங்கையில் மாறி மாறி வந்த அனைத்து அரசாங்கத் தலைவர்களுடனும் ஆரோக்கியமான உறவை பேணி வந்தவர்.

உலக வங்கியும் அவருக்கு கடனுதவி செய்துள்ளது.

நாடாளுமன்றில் அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பேசிய ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சை எழுதிவந்து, வீரகேசரியில் வெளியிட்டதனால் நிருபர் தியாகராஜாவும் சங்கடங்களுக்குள்ளானார். எனினும் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தனது புத்தி சாதுரியத்தினால் தியாகராஜாவை அன்று காப்பாற்றினார்.

மீண்டும் இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நவராத்திரி விழாவுக்கு வருகின்றேன்.

அந்த விழா, வீரகேசரியின் விளம்பரப்பிரிவு – விநியோகப்பிரிவு அமைந்திருந்த மண்டபத்தில் ஒரு நாள் மாலை தொடங்கி இரவு முடிந்தது.

நிருவாக இயக்குநர் சபையினர் அனைவரும் தங்கள் மனைவி மக்கள் சகிதம் வந்தனர். அத்தகைய முக்கிய வைபவங்களில்தான் அவர்களை நாம் அங்கே காணமுடியும்.

மண்டபத்தில் சிறிய மேடை அமைக்கப்பட்டு, அதன் மீது அமர்ந்து எனது உரையை ஒரு பாடசாலை மாணவன்போன்று நிகழ்த்தினேன். அச்சுக்கோப்பாளர் மற்றும் ஒப்புநோக்காளர் பிரிவுகளிலிருந்தும் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன்.

அது மகாகவி பாரதியின் புகழ் பாடும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. அதனை நானே எழுதினேன். சிவாஜி நடித்த கிரகப்பிரவேசம் படத்தில் இடம்பெறும் ஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா..?

அதன் இசைமெட்டை பின்னணியாக வைத்து பாரதியின் புகழ் பாடுவோம் என்று தொடக்கப்பாடலை வில்லிசையில் வழங்கி பாரதியின் கதையை சுவாரசியமாகச்சொன்னோம்.

என்னுடன் பங்கேற்றவர்கள் எமது பிரிவில் பணியாற்றிய கனகசிங்கம், சோதிநாதன், அச்சுக்கோப்பாளர் பிரிவிலிருந்து நவரட்ணம்.

நிறைய நகைச்சுவைத்துணுக்குகளையும் அந்த வில்லுப்பாட்டில் இணைத்திருந்தேன்.

உதாரணத்திற்கு இரண்டு:

பாரதி பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம்… என்று நான் தொடங்கும்போது, அருகிலிருந்து பக்கப்பாட்டு பாடும் சோதிநாதன், “ எந்தத் திருநெல்வேலி, எங்கட அன்னக்காவின்ர திருநெல்வேலியா..? எனக்கேட்பார்.

அன்னக்கா என்பது எங்களுடன் பணியாற்றிய திருமதி அன்னலட்சுமி இராசதுரை. அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச்சேர்ந்தவர்.

பாரதியார் எட்டயபுர மன்னருக்கு சீட்டுக்கவி எழுதிக்கொடுத்தார்…. என்ற வரி வரும்போது,

“ நாங்களும் எங்கள் சம்பளத்தை உயர்த்தித்தாருங்கள் என்று சீட்டு எழுதிக்கொடுப்போமா..? “ என்று பக்கப்பாட்டுக்காரர் கேட்பார்.

சபையினருடன் முதலாளிமாரும் சிரித்தனர்.

அந்த பக்கப்பாட்டுக்காரர் சோதிநாதன் தமிழர் விடுதலைக்கூட்டணி செயல் அதிபர் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய உறவினர். தொடர் ஸ்மோக்கர். அதனால் இறுதியில் அவர் இறந்துவிட்டார். அப்போது நான் அவுஸ்திரேலியாவில்.

அதே பாரதியின் புகழ் பாடுவோம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வவுனியாவில் பூவரசங்குளத்திலும் பாரதி விழாவில் மேடையேற்றினோம். அந்த நிகழ்ச்சிக்காக கொழும்பிலிருந்து சென்ற எம்மை, அந்நிகழ்ச்சி நடுஇரவு முடிந்ததும், தமது ஜீப் வண்டியில்

ஏற்றிவந்து வவுனியா இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டவரான காந்தீய இயக்கத்தைச்சேர்ந்த மருத்துவர் ராஜசுந்தரமும் 1983 கறுப்பு ஜூலை காலத்தில் வெலிக்கடை சிறையில் படுகொலைசெய்யப்பட்டார்

பாரதியின் புகழ் பாடுவோம் வில்லுப்பாட்டு எங்கள் நீர்கொழும்பூரிலும், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் விக்ரோரியா கரம்டவுன்ஸ் சிவா – விஷ்ணு ஆலயத்திலும் வேறு வேறு கலைஞர்களுடனும் ஊருக்குத்தக்கதாக மாற்றப்பட்ட பிரதிகளுடனும் மேடையேறியிருக்கிறது.

இவ்வாறு பாரதியின் புகழை வில்லுப்பாட்டிலும், நாடகத்திலும் எழுத்துக்களிலும் தொடர்ந்து பரப்பிவருவதும் எனது இந்த வாழ்க்கையில் முக்கிய அங்கம்தான்.

வீரகேசரிக்கு 1980 இல் ஐம்பது ஆண்டு நிறைவு வந்தது.

எங்கள் முதலாளிகள் அங்குள்ள ஊழியர்களுக்கு ஏதும் விசேசம் செய்வார்கள் என நம்பிக்காத்திருந்தோம்.

கிடைத்தது என்ன தெரியுமா..?

ஒரு சிறிய பார்சலில் சக்கரைப்பொங்கலும் வீரகேசரி ஐம்பதாவது ஆண்டு சிறப்பிதழ் பிரதி ஒன்றும்தான்.

ஆனால், மறு புறத்தில் வீரகேசரி நிர்வாக சபைத்தலைவர், இயக்குநர் சபை உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் வர்த்தக தொடர்பு – அரசியல் தொடர்பு பிரமுகர்கள் ஒன்று கூடிய பெருவிழா, கலதாரி மெரிடீன் நட்சத்திர உல்லாச விடுதியில் இராப்போசன விருந்து, பெலி டான்ஸுடன் நடந்தது.

நான் எனது குழந்தைகளுக்கு பால் மா வாங்குவதற்காக 15 ரூபாவுக்கு கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.

நான் மட்டுமா..? இன்னும் சிலர் அங்கே அவ்வாறு எழுதியும் சம்பாதிக்கவேண்டியிருந்தது.

வீரகேசரிக்கு தற்போது வயது 91 வருடங்கள் !

( தொடரும் )

letchumanam@gmail.com

Loading

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *